விவசாயம் செய்பவர்கள் மட்டும் தான் பொங்கலை கொண்டாட வேண்டும் என்கிற அவசியமில்லை. சாப்பாடு சாப்பிடும் ஒவ்வொருவரும் சூரிய பகவானை வழிபாடு செய்யலாம். சரி வாங்க, பொங்கலன்று பூஜை செய்வது எப்படி என்று பார்க்கலாம். பொங்கல் பண்டிகை வருவதற்கு முன்பாகவே வீட்டை சுத்தப்படுத்திவிட்டு, தை திருநாளன்று அதிகாலையில் எழுந்து நீராடி, புத்தாடை உடுத்திக் கொள்ளுங்கள்.
சூரிய பகவானை வழிபடும் போது சூரிய ஒளி படும் இடத்தில் பூஜை செய்வது தான் வழக்கம். இருப்பினும், இப்படி செய்ய முடியாதவர்கள் வீட்டிலேயே பூஜை அறையில் செய்யலாம். பொதுவாக பிரம்ம முகூர்த்த நேரம் என்பது விசேஷமான காலம் ஆகும். பிரம்ம முகூர்த்தத்தில் பொங்கல் வைப்பதும் விசேஷமாக கருதப்படுகிறது. பொங்கல் வைத்துவிட்டு, சூரியன் உதயத்தின் போது தீபாராதனை காண்பிக்க வேண்டும்.
ஒருவேளை சீக்கிரம் பூஜை செய்ய முடியாதவர்கள் 7 மணியிலிருந்து 8 மணிக்குள் பூஜை செய்யலாம். அப்படியும் தவற விடுபவர்கள் 12 மணியிலிருந்து 1 மணிக்குள் பூஜை செய்து முடித்துவிட வேண்டும். பொதுவாக, மதிய நேரத்தில் பூஜை செய்யமாட்டார்கள். ஆனால், இது சூரியனை வழிபடும் பூஜை என்பதால் இந்த நேரத்தில் பூஜை செய்வது தவறேதும் கிடையாது.
பொங்கல் வைக்க வேண்டிய இடத்தை முன்னாடி நாளே சாணம் போட்டு மொழுகி மஞ்சள் தண்ணீர் தெளித்து தயார் செய்து வைத்து விட வேண்டும். காலையில் எழுந்து பச்சரிசி மாவில் வண்ணமையமான கோலங்கள் போட வேண்டும். 3 கரும்புகளை ஒன்றாக இணைத்து கட்டி தளம் அமைத்துக் கொள்ளவும்.
பூஜையில் முதலில் முழுமுதற் கடவுளான விநாயகரை மஞ்சளில் பிடித்து வைக்க வேண்டியது கட்டாயம். அடுத்ததாக, அவருக்கு அருகம்புல் வைத்து பூரண கும்ப கலசம் வைக்க வேண்டும்.
வாழையிலையில் அரிசியை பரப்பி, அதன் மேல் கும்பம் வைத்து அதில் இருகைகளால் பச்சரிசியை போட வேண்டும். அதற்குள் உங்களிடம் ஸ்வர்ண நகைகள் இருந்தால் போட்டுக்கொள்ளலாம். பச்சை கற்பூரம், லவங்கம், ஏலக்காய் போட்டு, கும்பத்தின் மீது மாவிலை வைத்து, மஞ்சள் பூசிய தேங்காய் ஒன்றை கலசமாக வைத்துக் கொள்ளவும். அடுத்ததாக, தேங்காய் மற்றும் கும்பத்திற்கு மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும்.
பின்னர், பொங்கல் செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். புதுப்பணையில் பொங்கல் வைத்து அது பொங்கி வரும்போது சூரியனை பார்த்தபடி, பொங்கலோ பொங்கல் என்று கூறி பொங்கல் தயாரித்துக்கொள்ள வேண்டும். பிறகு, பொங்கல் ரெடியானதும் வாழையிலையில் நிவேதனம் வைத்து பூஜையை தொடங்கலாம். முதலில் மஞ்சள் பிள்ளையாருக்கு ஆராத்தி காண்பித்து, அடுத்து சூரியனை நோக்கி காண்பிக்க வேண்டும்.
இந்த பூஜை செய்த பின்பு தான் பூஜை அறைக்கு சென்று பொங்கல் வைத்து மற்ற தெய்வங்களை வழிபாடு செய்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும். பின்னர், வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பொங்கலை பகிர்ந்தளித்து கொண்டாடுங்கள். அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…