தேனி மாவட்டம் போடி குப்பிநாயக்கன்பட்டி பழைய போடிமெட்டு பாதையில் வசித்து வருபவர் கண்ணன் (வயது 45). இவர், இறைச்சிக்கடையில் கறி வெட்டும் தொழில் செய்துவந்துள்ளார்.
இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் ஆகியோர் உள்ளனர். ஆனால் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி பிரிந்து சென்று தனது குழந்தைகளுடன் உசிலம்பட்டி அருகே உள்ள சுரக்காபட்டியில் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். எனவே கண்ணன் மட்டும் அவரது வீட்டினில் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் கண்ணன் தினமும் இரவில், தனது வீட்டுக்கு அருகே வசிக்கும் கூலித்தொழிலாளியான ஞானசேகரன்(60) என்பவருடன் சோந்து மது அருந்துவது வழக்கம்.
குத்திக்கொலை:
இந்தநிலையில் நேற்று ஞானசேகரன், கண்ணனிடம் தனக்கு ஓசியில் மது வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு, கண்ணன் பணம் இல்லை என்று கூறி ஞானசேகரனை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் கண்ணன் மீது ஞானசேகரனுக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து கண்ணன் தனது வீட்டில் இரவு படுத்திருந்திருக்கிறார். அந்த நேரம் அங்கு சென்ற ஞானசேகரன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கண்ணனின் நெஞ்சு மற்றும் கண்ணுக்கு கீழே குத்தினார். இதனால் வலி தாங்காமல் கண்ணன் அலறினார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் ஞானசேகரன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய கண்ணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர், மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஞானசேகரன் கைது:
இதுகுறித்து போடி நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானசேகரனை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…