சாலை விபத்துகளை தடுப்பதற்காக கோவையில் குட்டிக் காவலர் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய நகரமான கோவையில்தான் அதிக சாலை விபத்துகள் நடக்கின்றன. இதனால் சாலை விபத்துகளை தவிர்க்கவும், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உயிர் எனும் தொண்டு அமைப்பு, அரசுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில், உயிர் அமைப்பு தற்போது கோவையில் பள்ளி மாணவர்களைக் கொண்டு குட்டி காவலர் எனும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை அரசுடன் இணைந்து தொடங்கி உள்ளது. இந்த திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பெரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார்.
கோவை கொடிசியாவில் இதற்காக அமைக்கப்பட்டிருந்த நிகழ்ச்சியில் சுமார் 5,000 மாணவர்கள் பங்கேற்றனர். இந்த திட்டத்தின்படி பள்ளி மாணவர்களுக்கு சாலை விபத்தால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சாலை விதிகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்படும்.
மேலும் இந்த நிகழ்ச்சியின்போது, தலைக்கவசம், சீட் பெல்ட் அணிவோம், அதிவேகமாக வாகனத்தை இயக்க மாட்டோம், வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசமாட்டோம் என்ற சாலை பாதுகாப்பு உறுதிமொழியை முதல்வர் ஸ்டாலின் முதலில் வாசிக்க, அதனை தொடர்ந்து பள்ளி மாணவர்களும் கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…