பொன்னியின் செல்வன் திரைப்படம் வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தைத் தவறாகச் சித்தரித்துள்ளதாக இயக்குனர் மணிரத்னம் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமரர் கல்கி எழுதிய வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்னம் அதே பெயரில் இரண்டு பாகங்களாக திரைப்படமாக எடுத்துள்ளார். இதில் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ராஜராஜ சோழனின் தளபதிகளில் ஒருவரான வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை தவறாகச் சித்தரித்துள்ளதாகவும், இதற்காக படத்தை இயக்கிய மணிரத்னம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சார்லஸ் அலெக்ஸ்சாண்டர் என்பவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
வரலாற்றை பொய்யாக திரித்துக் கூறி படமெடுத்துள்ளதாக கூறியுள்ள சார்லஸ் சோழப் பேரரசரான ராஜராஜ சோழனின் படைத் தளபதியும், சோழ வரலாற்றில் முக்கிய பங்கு வகித்த வந்தியத்தேவன் குறித்து உண்மைக்குப் புறம்பாகத் திரைப்படத்தில் கூறியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக வந்தியத்தேவனை பெண் பித்தன் போல் பொய்யாகச் சித்தரித்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார். எனவே இத்திரைப்படத்தின் இயக்குநரான மணிரத்னம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…