வத்தலக்குண்டுவில் அதிமுக 10 ஆண்டுகள் ஆட்சியில் மலையென குவிந்த 800 டன் குப்பைகள் அதிரடி அகற்றப்பட்டு, அந்த இடத்தில் நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு சிறப்புநிலை பேரூராட்சிக்குட்பட்ட உசிலம்பட்டி சாலை, கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் நிறைந்துள்ள பகுதியில் மற்றும் மயான சாலையில் பகுதியில் உள்ள சுப்பிரமணியர் கோவில் அருகாமையில் சுமார் 1000 அடி நீளத்திற்கு சாலையின் இருபுறமும் கடந்த அதிமுக ஆட்சியில் மலைபோல குப்பைகள் குவிக்கப்பட்டிருந்தது.சில இறைச்சி கடைக்காரர்கள் குப்பைகள் மீது இறைச்சி கழிவுகளை கொட்டினர்.இதனால் அப் பகுதியில் உள்ள 500 குடும்பங்கள் துர்நாற்றத்தால் அவதி அடைந்து வந்தனர்.சில சமூக விரோதிகள் குப்பைகளின் தீவைத்ததால் புகை மண்டலம் ஏற்பட்டு அங்கிருந்து குடியிருப்பு பகுதிக்குள் புகை பரவிஅப்பகுதி மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
தகவல் அறிந்த வத்தலகுண்டு பேரூராட்சி தலைவர் சிதம்பரம், துணைத் தலைவர் தர்மலிங்கம் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் மயான சாலை பகுதியை நேரில் சென்று ஆய்வு செய்தனர். அதை தொடர்ந்து, எனது குப்பை எனது பொறுப்பு திட்டத்தில் அங்கிருந்த 800 டன் குப்பைகளும்13 நாட்களில் 900 டிராக்டர் நடைகள் மூலம் அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட குப்பைகளில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரிக்கப்பட்டது.
பின்னர் அப்பகுதியில் துர்நாற்றத்தை முற்றிலும் அகற்ற பினாயில் மற்றும் பிளிச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. அங்கிருந்த குப்பைகளால் கருப்பான மணல்கள் அகற்றப்பட்டு புதிய செம்மண் அப்பகுதி முழுவதும் பரவப்பட்டது. அதை தொடர்ந்து மீண்டும் அப்பகுதியில் யாரும் குப்பை கொட்டாத வண்ணம் பசுமை பூங்காவாக மாற்ற ஏற்பாடு செய்தனர்.
அதற்காக சாலையின் இருமருங்கிலும் 100 குழிகள் தோண்டப்பட்டது. பல்வேறு மணம் வீசும் மூலிகை மற்றும் பூச்செடிகள் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதில் திமுக ஒன்றிய செயலாளர் கே.பி.முருகன், நகர செயலாளர் சின்னதுரை உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்
பேரூராட்சி நடவடிக்கையால் அப்பகுதி மக்கள் நிம்மதியும் மகிழ்ச்சி யும் அடைந்துள்ளனர். அப்பகுதி மக்கள் அதிரடி நடவடிக்கை எடுத்த பேரூராட்சிக்கு நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் அங்கு குப்பை கொட்டுவதை தடுக்க எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு மீறினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குப்பை கொட்டுவதை தடுக்க அந்தப் பகுதி மக்களால் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இது குறித்து பேரூராட்சி தலைவர் சிதம்பரம் கூறுகையில் வத்தலகுண்டு எழில் மிகுந்த நகரம். அதை அதிமுகவினர் 10 ஆண்டு ஆட்சியில் குப்பை காடாக வைத்திருந்தனர். அதை தூய்மை நகராக்க பேரூராட்சி கடுமையாக போராடி செயலாற்றி வருகிறது. மயான சாலை பகுதியை இன்னும் மூன்று மாதத்தில் பசுஞ்சோலையாக மாற்றுவோம் என்றார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…