தொழிற்சாலையிலிருந்து வெளியான ரசாயன கேஸால் 200 பெண்களுக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் அனகாப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அச்சுதாபுரத்தில் இயங்கிவரும் போரஸ் நிறுவனத்தில் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு கசிந்தது.
இதனால் அங்கு பணியாற்றிய பெண் ஊழியர்களுக்கு மயக்கம், மூச்சுதிணறல் மற்றும் வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. சுமார் 200 பெண்களுக்கும் மேல் இதனால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரையும் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு தற்போது அனைத்து பெண்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே பெண் ஊழியர்கள் மயங்கி விழுந்ததால் பீதியடைந்த மற்ற தொழிலாளர்கள் தொழிற்சாலையை விட்டு அலறியடித்து வெளியேறினர்.
தகவலறிந்து தொழிற்சாலைக்கு வந்த மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வாயு கசிவு ஏற்படாமல் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தபட உள்ளதாக தெரிகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…