தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகேயுள்ள துலுக்கர்பட்டியை சேர்ந்த திருநங்கை மகேஷ், இவருடைய தோழி அனன்யா இவரும் திருநங்கை தான். இவர் தென்காசி மாவட்டம் கே.ஆலங்குளத்தினை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் கடந்த 7 ஆம் தேதி துலுக்கர்பட்டியில் இருந்து கெச்சிலாபுரத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது கழுகுமலையை சேர்ந்த நோவாபூபன் மற்றும் அவருடைய நண்பர் விஜய் ஆகிய இருவரும் இருசக்கரவாகனத்தில் சென்ற மகேஷ் மற்றும் அனன்யாவை வழிமறித்து கடத்திச் சென்று கெச்சிலாபுரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.
அப்போது அனன்யாவின் தலைமுடியை பிளேடால் அறுத்து, அதை வீடியோவும் எடுத்துள்ளனர். இதை வெளியில் யாரிடமாவது கூறினாள் கொலை செய்துவிடுவோம் என்றும் அவர்களை மிரட்டியுள்ளனர். இந்தநிலையில், தாக்குதல் கடுமையாக காயமடைந்த மகேஷ், அனன்யா இருவரும் கோவில்பட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
அப்போது, விஜய், நோவாபூபன் இருவரும் மருத்துவமனைக்கு வந்து அரிவாளை காட்டி, நீங்க இருவரும் இந்த ஊரிலேயே இருக்கக்கூடாது என்று அவர்களை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், திருநங்கைகள் இருவரும் மருத்துவமனையிலிருந்து யாரிடமும் சொல்லாமல் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், திருநங்கைகள் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இதனையடுத்து 2 திருநங்கைகள் மீது தாக்குதல் நடத்திய நோபா யூபன், விஜய் ஆகிய இருவரையும் கழுகுமலை காவல் நிலையப் போலீஸார் கைது செய்து ஆபாசமாகப் பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல், திருநங்கைகளின் பாதுகாப்புச்சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…