ஜனவரி 17 அன்று வங்கதேசத்தில் இருந்து கடல் மார்க்கமாக வந்த கண்டெய்னர்களை மலேசியாவில் உள்ள போர்ட் கிள்ளான் ஊழியர்கள் இறக்கியபோது, அவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். வணிகப் பொருட்களுடன், ஒரு கண்டெய்னரில் ஒரு சிறுவன் இருந்துள்ளான்.
சிறுவனிடம் பேச்சு கொடுத்தபோது அவனது மொழி, அங்கிருந்த ஊழியர்களுக்கு புரியவில்லை. எனவே அவனுடன் தொடர்புகொள்வது ஒரு பெரிய போராட்டமாக இருந்தது.
துறைமுக அதிகாரிகள் இது ஆள் கடத்தல் வழக்காக இருக்கலாம் என சந்தேகமடைந்து, காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். எனினும், இந்த வழக்கின் விசாரணையில் திடுக்கிடும் உண்மை வெளிவந்துள்ளது.
15 வயதான ஃபாஹிம் வங்கதேசத்தின் சிட்டகாங்கில் தனது நண்பர்களுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது ஒளிந்துகொள்வதற்காக, ஒரு கண்டெய்னரில் சென்று பதுங்கியுள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக கண்டெய்னர் பூட்டிக் கொண்டதால் அவனால் வெளியே வரமுடியவில்லை.
பின்னர் அந்த கண்டெய்னர் மலேசியாவிற்கு செல்லவிருந்த வணிகக் கப்பலுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்தக் கப்பல் ஜனவரி 11ஆம் தேதி சிட்டகாங் துறைமுகத்தில் இருந்து பயணத்தைத் தொடங்கி, ஜனவரி 17ஆம் தேதி மலேசியாவில் உள்ள கிள்ளான் துறைமுகத்தை அடைந்தது.
அந்த சிறுவன் 6 நாட்கள் முழுவதுமாக கண்டெயினருக்குள் அடைக்கப்பட்டிருந்தான். அவன் கன்டெய்னருக்குள் இருந்து உதவி கேட்டு அலறினானாலும், அது யாருக்கும் கேட்கவில்லை. ஆனாலும், சிறுவன் எப்படி 6 நாட்கள் உணவு அல்லது தண்ணீர் இல்லாமல் உயிர் பிழைத்தான் என்பது இன்னும் அனைவருக்கும் புரியாத புதிராகவே உள்ளது.
மிகவும் பலவீனமான நிலையில் இருந்த ஃபாஹிம், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சீராக குணமடைந்து வருவதாக கூறப்படுகிறது. அவன் குணமடைந்தவுடன் மீண்டும் வங்கதேசத்துக்கு அனுப்பவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
முன்னதாக, கடந்த ஆண்டு அக்டோபரில், சிட்டகாங்கில் இருந்து மலேசியாவின் பினாங்கு துறைமுகத்திற்கு அனுப்பப்பட்ட கண்டெய்னரில் இருந்து ஒரு இளைஞனின் சிதைந்த உடலை போலீசார் மீட்டது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…