அமைச்சர் செந்தில்பாலாஜி கைதைக் கண்டித்து கோவையில் இன்று திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகளால் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கோவையில் இன்று மாலை கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
கோவை சிவானந்தா காலனியில் இன்று மாலை 5 மணிக்கு இந்த கண்டன பொதுக்கூட்டம் தொடங்குகிறது. இதில், தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்துகிறார்.
அதைத் தொடர்ந்து, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்களான காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ,சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர்மொகதீன்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் ஆகியோரும் பங்கேற்று, மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து உரையாற்றவுள்ளனர்.
இந்தக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்குமாறு கோவை மாவட்டம் முழுவதிலும் உள்ள தி.மு.க. மற்றும் காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கண்டன பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…