போதைப்பொருளுக்கு அடிமையான இரண்டு பேர், தெற்கு டெல்லியின் லோதி காலனியில் 6 வயது சிறுவனை கழுத்தை அறுத்து தலையில் தாக்கி நரபலி கொடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் பீகார் மாநிலம் கதிகாரைச் சேர்ந்த விஜய் குமார் (23) மற்றும் சஹர்சாவைச் சேர்ந்த அமர் குமார் (21) என அடையாளம் காணப்பட்டனர்.
லோதி காலனியில் சிபிஐ கட்டிடத்திற்கு அருகிலுள்ள சிஜிஓ வளாகத்தின் கட்டுமான தளத்தில் தர்மேந்திரா என்ற குழந்தையின் கழுத்தை இரண்டு பேர் அறுத்துள்ளதாக போலீசாருக்கு கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
போலீசார் நடத்திய விசாரணையில் சிறுவனின் பெற்றோர் அதே கட்டுமான பகுதியில் வேலை செய்து வந்தது தெரிய வந்துள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு உணவுக்குப் பிறகு கட்டுமானப் பகுதியில் சில பெண்கள் பஜனை பாடிக்கொண்டிருந்ததாகவும், அவரது மகன் அருகில் இருந்ததாகவும் சிறுவனின் தந்தை கூறினார்.
இருப்பினும், அவர்கள் தூங்க செல்லும்போது, சிறுவன் காணாமல் போனான். அவரது குழந்தையைத் தேடிய பின்னர், அவர்களின் கொட்டகையிலிருந்து இரத்தம் வெளியேறுவதைக் கவனித்த தந்தை, கதவைத் திறந்தார், படுக்கைக்கு அடியில் தனது மகனின் சடலத்தைப் பார்த்துள்ளார்.
போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அதே கட்டுமானத்தில் சிறுவனின் தந்தையுடன் வேலை செய்த இரு இளைஞர்கள் செல்வத்தை பெறுவதற்காக ஒரு நரபலி கொடுக்குமாறு சிவபெருமான் அவர்களிடம் கனவில் கூறியதாகவும், அதனால் சிறுவனைக் கொன்றதாகவும் கூறியுள்ளனர். அவர்கள் இருவரும் போதைக்கு அடிமையானவர்கள் என தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் பிற தொழிலாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சிறுவனை நரபலி கொடுத்தவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…