ரஷ்ய எண்ணெய் இறக்குமதி மற்றும் பயங்கரவாதம் போன்ற பிரச்சனைகளில் இந்தியா மீது அழுத்தம் கொடுக்க முயற்சிக்கும் மேற்குலக நாடுகளுக்கும், அந்த நாடுகளை சார்ந்த பத்திரிகையாளர்களுக்கும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மேற்குலக நாட்டில் வைத்தே மீண்டும் ஒருமுறை தரமான பதிலடி கொடுத்துள்ளார்.
இந்திய வெளியுறவுத் துறையில் நீண்ட காலம் பணியாற்றியதோடு, தற்போது இந்தியாவின் வெளியுறவு அமைச்சராகவும் இருக்கும் ஜெய்சங்கரின் ஆணித்தரமான பேச்சுக்கு இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனால் அவரை எதிர்கொள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களே தயக்கம் காட்டுவது வழக்கம்.
இந்நிலையில் அமைச்சர் ஜெய்சங்கர் தனது இரு நாட்டு சுற்றுப்பயணத்தின் இரண்டாவது கட்டமாக ஆஸ்திரியாவுக்கு சென்றார். அங்கு ஊடகவியலாளர் ஒருவர் ஜெய்சங்கரை மடக்கி விடலாம் என்பதுபோல், பாகிஸ்தான் முதல் ரஷ்யா வரையிலான பல கேள்விகளை அள்ளிவீச, அதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கொடுத்த அசால்ட் பதில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
நடந்தது என்ன?
அந்த பத்திரிக்கையாளர் ஜெய்சங்கரிடம், இந்தியாவை ரஷ்யாவின் நட்பு நாடாக (Russian's Ally) கருதுவீர்களா? என்று கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்வி, ரஷ்யா-உக்ரைன் போரின் பின்னணியில் ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டும் இந்தியாவை வீழ்த்தும் முயற்சியாகவே தோன்றியது.
The New Powerful India! pic.twitter.com/19qThsHmbX
— Porinju Veliyath (@porinju) January 4, 2023
ஆனால், இந்த விவகாரத்தில் சாமர்த்தியமாக பதிலளித்த ஜெய்சங்கர், "நாங்கள் ஒரு சுதந்திர நாடு. நாங்கள் எங்களை ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் வரையறுக்கவோ அல்லது கூட்டணி அடிப்படையில் எங்களை அப்படி உணரவோ இல்லை. Ally என்பதெல்லாம் மிகவும் மேற்கத்திய சொற்கள். இது நாங்கள் பயன்படுத்தும் சொல் அல்ல" என்று கூறினார்.
ரஷ்ய எண்ணெய் இறக்குமதி குறித்து பேசிய ஜெய்சங்கர், ஐரோப்பா தனக்கு வசதியாக இருக்கும் வகையில் இறக்குமதியை குறைத்துள்ளது என்றார். மேலும் பேசிய அவர், "தனிநபர் வருமானம் $60,000 கொண்ட நீங்கள் உங்கள் மக்களிடம் மிகவும் அக்கறை கொள்கிறீர்கள். எங்கள் நாட்டில் தனிநபர் வருமானம் $2000 கொண்ட மக்கள் உள்ளனர். அவர்களுக்கு ஆற்றல் தேவைப்படுகிறது.
அதிக விலை கொடுக்கக்கூடிய நிலையில் நாங்கள் இல்லை. எண்ணெய் விலை இரட்டிப்பாகி உள்ளது. ஐரோப்பாவும் மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய் உற்பத்தியை ஐரோப்பாவிற்கு திருப்பி, விலையை உயர்த்துகிறது. எனவே, ஐரோப்பா உலக எண்ணெய் சந்தையில் அழுத்தம் கொடுக்கிறது." என்று ஜெய்சங்கர் கூறினார்.
பாகிஸ்தானைப் பற்றிய அவரது 'பயங்கரவாதத்தின் மையம்' என்ற கருத்து குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர், பாகிஸ்தான் ஒரு நாடாக பயங்கரவாதத்தை பரப்பவில்லை என்று அந்நாட்டுக்கு ஆதரவாக பேசினார்.
இதற்கு பதிலளித்த ஜெய்சங்கர், "பாகிஸ்தான் இறையாண்மையை பாகிஸ்தான் கட்டுப்படுத்தினால், அவர்கள் தான் செய்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். பயங்கரவாத முகாம்கள் பட்டப்பகலில் ஆட்சேர்ப்பு மற்றும் நிதியுதவியுடன் நகரங்களில் இயங்கும்போது, பாகிஸ்தானிய அரசுக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை என்று நீங்கள் உண்மையிலேயே என்னிடம் கூறுவது சரியா? குறிப்பாக, இராணுவ அளவிலான போர் தந்திரங்களில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது." என்று விளாசினார்.
தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தானை கண்டிக்காத ஐரோப்பிய நாடுகளையும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையாக சாடினார். இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க, பாகிஸ்தானுக்கு ஆயுதம் உள்ளிட்ட பல உதவிகளை வழங்கிய மேற்குலக நாடுகளையும் அந்த பேட்டியில் கிழித்து தொங்கவிட்டுள்ளார்.
இந்நிலையில், ஐரோப்பாவில் வைத்தே ஐரோப்பிய நாடுகளை சரமாரியாக ஜெய்சங்கர் வெளுத்து வாங்கியது சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…