மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தற்போது ராணுவம் தலையிடாவிட்டால் பாகிஸ்தான் மூன்று மூன்று துண்டுகளாக உடைந்துவிடும் என்று எச்சரித்துள்ளார்.
அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதிலிருந்து, நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த அமைப்பாகக் கருதப்படும் பாகிஸ்தான் ராணுவத்துடன் வார்த்தை மோதலில் ஈடுபட்டு வரும் இம்ரான் கான், ராணுவம் தனது நடுநிலையான நிலைப்பாட்டை கைவிடுமாறு பலமுறை அறிவுறுத்தினார்.
இருப்பினும் எதுவும் நடக்காத நிலையில், ஏப்ரல் 9 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக தீர்ப்பளித்ததால், நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்ட பாகிஸ்தானின் முதல் பிரதமர் என இம்ரான் கான் வரலாற்றில் இடம் பெற்றார்.
மீண்டும் தான் ஆட்சிக்கு வர உதவாவிட்டால் பாகிஸ்தான் ராணுவம் அழிக்கப்படும் என்று கூறிய முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு பதவியில் நீடித்தால், பாகிஸ்தான் திவாலாகிவிடும் என்றார்.
பொருளாதார நிலை மோசமடைந்து நாடு திவாலானால், பாகிஸ்தானிடம் இருக்கும் அணு ஆயுதங்களை அழிக்கச் சொல்லும் நிகழ்வுகள் நடக்கலாம், 1990களில் உக்ரைனுக்கும் இது தான் நடந்தது என்ற இம்ரான் கான் பாகிஸ்தானின் பிரதமராக இருந்த தனது கடைசி இரவை நினைவு கூர்ந்து, தேசத்திற்கு அடித்தளம் அமைத்து வலுப்படுத்த வேண்டிய நிறுவனங்கள் நாட்டை பலவீனப்படுத்துகின்றன என்று கூறினார்.
பாகிஸ்தான் ஊடகத்திடம் அளித்த பேட்டியில் இம்ரான் கான், "இது பாகிஸ்தானைப் பற்றியது. இது ஸ்தாபனத்தைப் பற்றியது. ஸ்தாபனங்கள் இப்போது சரியான முடிவுகளை எடுக்கவில்லை என்றால், முதலில் அவை அழிக்கப்படும் என்று நான் உங்களுக்கு எழுத்துப்பூர்வமாக சொல்கிறேன். அந்த ஸ்தாபனங்களில் முதன்மையாக அழியப்போவது ராணுவம் தான்.
மேலும், "பாகிஸ்தான் ராணுவம் பாதிக்கப்படும் மிகப்பெரிய அமைப்பாக இருக்கும். ராணுவம் வீழ்ந்தால், உக்ரைன்- அணு ஆயுத ஒழிப்பு போன்ற நிபந்தனைகளுக்கு உள்ளாக்கப்படுவோம். அவர்களின் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், அணுஆயுதத்தை கொண்டுள்ள ஒரே முஸ்லீம் நாடு நாம் மட்டுமே. அதை இழந்தால் என்ன நடக்கும்?
பாகிஸ்தான் மூன்றாக உடைந்து விடும் என்று இன்று சொல்கிறேன். இந்தியாவில் உள்ள சாதாரண சிந்தனையாளர் அமைப்புகளை பாருங்கள். பலுசிஸ்தான் விவகாரத்தை கடுமையாக்க திட்டம் உள்ளது. அப்படியான திட்டங்களை வகுத்துள்ளனர். நாம் இப்போது சரியான முடிவுகளை எடுக்கவில்லை என்றால் நாடு தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலை தான் வரும்." என்று தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…