தென்மாவட்டங்களில் பெரும் தொழிலதிபரான கருமுத்து தியாகராஜர் செட்டியார் மற்றும் ராதா தம்பதியரின் ஒரே மகன் கருமுத்து தி. கண்ணன். மதுரை கோச்சடையில் வசித்து வந்த இவர், தியாகராஜர் கல்லூரி, தியாகராஜர் மில்ஸ் மற்றும் பல நிறுவனங்களை நடத்தி வந்தவர். மேலும், 2006 முதல் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் அறங்காவலர் குழுத் தலைவராக தொடர்ந்து 18 ஆண்டுகளாகப் பதவி வகித்தார்.
2009 ஆம் ஆண்டு மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்திக் கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல், இவரது காலத்தில் கோயில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டன. முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் அபிமானத்தைப் பெற்றதால் ஆட்சிகள் மாறியபோதும் கோயில் தக்கார் பதவியில் தொடர்ந்து பதவி வகித்தார்.
சமீபகாலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர் இந்த ஆண்டு மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. மேலும், வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அதிகாலை காலமானார். இவருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். இவரது உடல் கோச்சடையிலுள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அங்கு, அமைச்சர்கள் உதயநிதி, பி.மூர்த்தி, கே.ஆர்.பெரியகருப்பன், பழனிவேல் தியாகராஜன், கனிமொழி எம்.பி., கோ.தளபதி (திருப்பரங்குன்றம்), ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்), மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜித்சிங் காலோன் ஆகியோரும், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்பி.உதயகுமார், ஓபிஎஸ் அணி சார்பில் முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…