கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், தானூரையடுத்த பரப்பனங்காடி பகுதியில் கடற்கரை இருக்கிறது. கடலும் ஆறும் கூடும் இடமான இப்பகுதியில் சுற்றுலா பயணிகளுக்காக படகு போக்குவரத்து இயக்கப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் விடுமுறை [மே 7, ஞாயிற்றுக்கிழமை] என்பதால் அப்பகுதியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது.
இந்தநிலையில் தான், நசீர் என்பவருக்கு சொந்தமான படகில், இரவு சுமார் 7.30 மணியளவில் 40க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர். 20 பேர் மட்டும் பயணம் செய்யும் அந்த படகில் 40க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததால் ஓவர்லோடு காரணமாக கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் இதுவரை 22 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இறந்தவர்களில் 15 பேர் குழந்தைகள் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் இந்த விபத்தில் பலியாகியுள்ளனர். மேலும், படகு விபத்தில் மீட்கப்பட்ட 8 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. இரவு நேரத்தில் நடந்த இந்த கோர சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. விபத்து குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன், நீதி விசாரனைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், விபத்துக்குள்ளான அட்லாண்டிக் என்ற படகு அனுமதி இல்லாமல், விதிமீறலுடன் இயக்கப்பட்டிருப்பதும், மீன்பிடிக்கப் பயன்படுத்தும் படகை பயணிகள் படகாக மாற்றியமைக்கப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த படகு உரிமையாளர் நாசர் என்பவரை கொலை வழக்கின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும், நாசருக்கு உதவிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் எனவும், சிகிச்சையில் இருப்பவர்களின் முழு மருத்துவச் செலவையும் அரசு ஏற்கும் எனவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…