தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள மஞ்சநம்பிகிணறு கிராமத்தினை சேர்ந்தவர் அழகுதுரை. இவருக்கு திருமணமாகி ராஜேஸ்வரி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளன. பூவியாபாரியான இவர் விவசாயிகளிடம் பூக்களை கொள்முதல் செய்து பூ மார்க்கெட்டில் விற்பனை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த புதன்கிழமையன்று அழகுதுரை வீட்டின் முன் அமர்ந்து கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சிலர் திடீரென அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அழகுதுரையை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் கேட்டு கோவில்பட்டி டி.எஸ்.பி மற்றும் கயத்தார் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணையில் அழகுதுரை நேற்று முன்தினம் செட்டிகுறிச்சியில் மாடசாமிக்கு சொந்தமான டாஸ்மாக் மது பாரில் தனது கூட்டாளி ஒருவருக்காக மது வாங்க சென்றுள்ளார்.
அப்போது அழகுதுரை ஊரைச் சேர்ந்த கனகராஜ் என்பவரும் அங்கு மது அருந்தி கொண்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. கனகராஜ் தனக்கு மது பாட்டில் வாங்க வேண்டும் என்றும், பணம் குறைவாக இருப்பதால் 200 ரூபாய் தரும்படியும், அழகுதுரையிடம் கேட்டு இருக்கிறார். இதற்கு அழகுதுரை மறுக்கவே, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது கனகராஜ் வேலை செய்யும் இடத்தின் உரிமையாளர் ஸ்டாலின், கனகராஜ்க்கு ஆதரவாக, அழகுதுரையிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதையெடுத்து அங்கிருந்தவர்கள் இரு தரப்பினையும் சத்தம் போட்டு அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து, கனகராஜ் அவருடைய உறவினர்கள் 7 பேரோடு, அழகுதுரையை சத்தம் போடுவதற்கு வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால், ஆத்திரத்தில் கனகராஜ் மற்றும் அவரது உறவினர்கள் அழகுதுரையை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, ஸ்டாலின் , மாடசாமி, அவரது மகன் பட்டுராஜ், கனகராஜ், பால்பாண்டி ஆகிய 5 பேரை கைது செய்த போலீசார், நாகராஜ், பாலமுருகனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…