60 வயதான ரிக்ஷா ஓட்டுநர் ஒருவர் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், இறந்துபோன நபரிடம் இருந்து அவரது நண்பருக்கு வீடியோ கால் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரி 29 அன்று, மகாராஷ்டிராவின் போயசர் மற்றும் பால்கர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்கும் போது அடையாளம் தெரியாத ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். பால்கரில் உள்ள அரசு ரயில்வே காவல்துறை இறந்தவரின் படங்களை சமூக ஊடகங்களில் பரப்பியது.
அப்போது பால்கரைச் சேர்ந்த ஒருவர் ரயில்வேயை காவல்துறையை அணுகி, இறந்தவர் தனது சகோதரர் ரஃபீக் ஷேக் என்று கூறினார். அவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு காணாமல் போனார். இதற்காக குடும்பம் காவல்துறையில் புகார் அளித்துள்ளது என்று ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் நரேஷ் ரந்தீர் கூறினார்.
இதையடுத்து சடலம் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று ஷேக்கின் நண்பர்களில் ஒருவர், ஷேக்கிடமிருந்து தொலைபேசி வந்ததால் அதிர்ச்சியடைந்தார். அவர் போனை எடுத்து பேசியதோடு, இருவரும் வீடியோ கால் மூலமும் பேசியுள்ளனர்.
மேலும் அவர் நலமாக இருப்பதாக ஷேக் தனது நண்பரிடம் தெரிவித்தார். இந்த அரட்டை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கிடையே இந்த வீடியோ கால் குறித்து ஓட்டுநரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஷேக்குடன் தொடர்பு கொண்டு, காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
போலீஸ் அதிகாரிகள் விசாரித்ததில், ஷேக் சில மாதங்களுக்கு முன்பு தனது வீட்டை விட்டு வெளியேறி பால்கரில் உள்ள சபாலாவில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்ந்துள்ளது தெரியவந்தது.
இதற்கிடையே, ஷேக்கின் குடும்பத்தாரால் அடக்கம் செய்யப்பட்ட உடல் யாருடையது என்பதை போலீசார் மீண்டும் விசாரிக்க ஆரம்பித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…