கல்வி கற்றவன் எங்கு சென்றாலும் பிழைத்துக் கொள்வான் என்பது வெறும் பழமொழி அன்று. மனிதனின் வாழ்நாளில் கல்வி ஒருவனுக்கு எவ்வளவு முக்கியம் வாய்ந்தது என்பதை எடுத்துணர்த்தும் விதமாகவே, கல்வி அமைகிறது. கல்வி மட்டுமே மற்றவர்களுக்குக் கொடுக்க கொடுக்க மேலோங்கும். நம்மிடம் இருந்து எடுத்துக் கொள்ள முடியாதவற்றில் நிரந்தமாக இருப்பது கல்வி தான். அத்தகைய கல்வி பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் எடுத்துக் கூறும் வகையிலும், இந்த சிறப்பு வாய்ந்த கல்வியை உருவாக்கியவரைக் கௌரவிக்கும் வகையிலும், இன்றைய தினம் அதாவது நவம்பர் 11 ஆம் நாள் தேசிய கல்வி தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராகவும், சுதந்திரப் போராட்ட வீரராகவும் விளங்கியவர் மௌலானா அபுல்கலாம் ஆசாத். இவரது பிறந்த நாள் நவம்பர் 11. இந்த தினமே, தேசிய கல்வி தினமாகக் கொண்டாடப்படுகிறது. இவரது முழுப்பெயரை மௌலானா அபுல் கலாம் முகையுதீன் அகமது ஆசாத் ஆகும். இந்தியா சுதந்திரம் பெற்ற பின், அதாவது 1947 ஆம் ஆண்டில் முதல் கல்வி அமைச்சராக விளங்கியவர் அபுல் கலாம் ஆசாத் ஆவார்.
சுதந்திரம் பெற்ற முதலே இவர் இலவச ஆரம்பக் கல்வி கிடைக்கவும், நவீன முறையில் கல்வி கற்கவும் வித்திட்டார். இதனைத் தொடர்ந்து, இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் நிறுவுவதற்கும், பல்கலைக்கழக மானியக் குழு அமைவதற்கும் அரும்பாடுபட்டார். இவரது உயர்ந்த செயல்களுக்கு, அவர் உயிருடன் இருந்த போதே, பாரத ரத்னா விருது வழங்க முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், அந்த சமயத்தில் தேர்வுக்குழு உறுப்பினராக இருந்தமையால், பாரத ரத்னா விருதை மறுத்து விட்டார். இவர் மறைந்த பின், இந்தியாவின் மிக உயர்ந்த பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
1947 ஆம் ஆண்டு கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்ற இவர், தான் மறையும் வரையில் அதாவது 1958 ஆம் ஆண்டு வரையே கல்வி அமைச்சராகப் பணியாற்றினார். அதன் படி, இந்தியாவில் மிக அதிக காலம் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்ற பெருமை இவருக்கு உண்டு. இவரது பெருமைகளை பறைசாற்றும் வகையில், கடந்த 2008 ஆம் செப்டம்பர் மாதம் 11 ஆம் நாள், மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளை தேசிய கல்வி தினமாக அறிவித்தது.
இவர் கல்வி மட்டுமின்றி, இந்திய மக்கள் சாதி, மத வேற்றுமைகளைக் கலைத்து, ஒற்றுமையுடன் வாழவும் அரும்பாடுபட்டார். நாள்தோறும் தன்னை நாட்டுக்காக அர்ப்பணித்தவர். இவர் நல்ல நினைவாற்றலைக் கொண்டவர். கல்வித்துறையில், இவர் சிறந்து விளங்கியவர். மேலும் இவர் லலித் கலா அகாடமி, சாகித்திய அகாடமி உள்ளிட்ட அமைப்புகளைத் தோற்றுவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…