தமிழகத்தில் அதிக மழை பெய்வதே வடகிழக்கு பருவமழை காலத்தில் தான். அந்தவகையில், இந்த வருடத்திற்கான வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதமே தொடங்கிவிட்டது. பருவமழை தொடங்கிய முதலே திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உள்பட வட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் ஏரிகள், குளங்கள், நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. இந்தநிலையில், சற்று இடைவெளி விட்ட மழை மீண்டும் தனது வீரியத்தை காட்டப்போகிறது. இதற்கு காரணம் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தான்.
அதன்படி, காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக்கடல் பகுதியில் 19 ஆம் தேதி வாக்கில் வலுபெறக்கூடும். இதனால், 20 ஆம் தேதி அன்று கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் உள்ள பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், காரைக்கால், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அதேபோல், 21 ஆம் தேதி அன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…