ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் மூலம் மத்திய அரசு 20,000 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வில் வினாத்தாள் ஹிந்தியில் வழங்கப்பட்டதாக சு.வெங்கடேசன் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கும் சு. வெங்கடேசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒன்றிய பணியாளர், பொது மக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியம், இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம். ஒன்றிய அரசு அமைச்சகங்கள், துறைகள், அரசியல், அரசு நிறுவனங்கள், அரசியல் சாசன அமைப்புகள், தீர்ப்பாயங்கள், உள்ளிட்ட இடங்களில் 20,000 காலிப் பணியிடங்களை நிரப்ப பணி நியமன அறிவிக்கையை கடந்த செப்டம்பர் 17 ஆம் நாள் வெளியிட்டது. இந்த தேர்வுக்கு ஒரு கோடி பேர் வரை விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது. இந்த தேர்வில் வினாத்தாள் மாநில மொழிகளுக்கு இடம் இல்லை எனவும், பணி நியமனத் தேர்வுக்கான கேள்வித் தாள் 2 மொழிகளில் மட்டுமே அதாவது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது சமவாய்ப்பு என்ற கோட்பாட்டிற்கே எதிரானது எனவும், இந்தி இல்லா மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு பாரபட்சம் காண்பிப்பது. மேலும், இதில் பணி நியமனம் பெறக் கூடிய ஊழியர்கள் இந்தியா முழுவதும் பணியமர்த்தப்பட உள்ளனர். இவர்கள் எப்படி உள்ளூர் மொழி அறிவு இல்லாமல் மக்களுக்குச் சேவை ஆற்ற முடியும்? உள்ளூர் தேர்வர்களின் பிரதிநிதித்துவம் தெரிவு பட்டியல்களில் மிகக் குறைவு என்ற பிரச்சனைகள், பல நிறுவனங்களின் பணி நியமனங்களில் வெளியிடப்பட்டது. எனவே, உடனடியாக தாங்கள் தலையிட்டு, ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன், மாநில மொழிகளிலும் கேள்வித் தாள்களை உறுதி செய்ய அறிவுறுத்த வேண்டுகிறேன். நல்ல பதிலை எதிர்பார்க்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…