நாள் முழுக்க வேலை செய்துவிட்டு இரவு தூங்கி எழுந்தால் அடுத்த நாளுக்கான வேலைகளை செய்ய நமது உடல் தயாராகிவிடும். அதற்காக சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அது ஒருபுறம் இருந்தாலும் தினமும் உடல் உறுப்புகள் ஓய்வுக்கு பிறகு, அதாவது காலை நேரத்தில் நாம் சாப்பிடும் எந்த ஒரு உணவாக இருந்தாலும் மென்மையானதாக இருக்க வேண்டும். ஆனால், நம்மில் பலரும் அதை பின்பற்றுவதே கிடையாது. அதனால், பல்வேறு வயிறு, செரிமானம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு ஆளாகிறோம்.
இந்த மாதிரியான பிரச்சனைகளில் இருந்து விடுபடவோ அல்லது வரவேக்கூடாது என்று நினைத்தால் வெறும் வயிற்றில் என்ன எடுத்தக்கொள்ள கூடாது, என்ன எடுத்துக்கொள்ளலாம் என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளவேண்டும். சரி, வாங்க காலை நேரத்தில் வயிற்றுக்குள் செல்லும் உணவுகள் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக்கூடாது என்று பார்க்கலாம்.
இரவு உணவுக்கும் மறுநாள் காலையில் உணவு எடுத்துக்கொள்வதற்கும் இடையில் அதிகம் நேரம் இருக்கிறது அல்லவா? இதனால், நமது வயிற்றில் செரிமானத்திற்கு தேவையான உணவு இல்லாமல் அதிகப்படியான அமிலம் சுரந்திருக்கும். அந்த நேரத்தில், டீ அல்லது காபி குடிக்கும் போது, இரைப்பையில் புண் ஏற்படும். அதாவது, எரியும் தீயில் எண்ணெயை ஊற்றுவது போல. இதனால், வெகு விரைவில் அல்சர் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்னும் சிலருக்கு அஜீரண பிரச்சனைகளும் ஏற்படும்.
காலை நேரத்தில் நம்மை புத்துணர்ச்சியாக்கி கொள்ள ஏதாவது ஒரு பானம் தேவை தான். அதற்காக, வெறும் வயிற்றில் சூடான டீ அல்லது காபி குடிப்பது நல்லதல்ல. அதற்காக டீ, காபி குடிக்கவே கூடாது என்று சொல்லவில்லை. அவற்றை குடிப்பதற்கு முன்பு வேறு ஏதாவது குடித்த பின்பு குடிக்கலாம். தினமும் காலை எழுந்தவுடன் பல் தேய்த்ததும் மிதமான சூட்டில் வெந்நீர் குடிப்பது நல்லது. இது உடலில் இருக்கும் கழிவை வெளியேற்றக்கூடியது. நச்சுக்கள் வெளியேறுவதால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். அதன்பிறகுகூட காபி, டீ குடிக்கலாம்.
நம்மில் பலருக்கும் இனிப்பும், காரமும் மிகவும் பிடித்த ஒரு சுவை. இவற்றை காலை நேரத்தில் அதிகமாக எடுத்துக்கொண்டால், உடலில் இன்சுலின் அளவு அதிகரித்துவிடும். இதன் விளைவு சர்க்கரை நோய். குறிப்பாக, வெள்ளை சர்க்கரை இனிப்புகள் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோல தான் காரம் மிகுந்த உணவுகளும். அதிக காரமும், அதிக மசாலாவும் வயிற்றில் அமிலத்தை அதிகரிக்க செய்து, வயிறு எரிச்சல், மற்றும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
அப்படியே இனிப்பு வேண்டுமென்றால் தேன், நாட்டுச் சர்க்கரை, கருப்பிட்டி போன்றவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம். இவை அமிலத்தன்மையை சீராக வைப்பதோடு, சர்க்கரை நோய் வராமலும் தடுக்கும்.
இரவு சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகவில்லை, ஜீரண சக்தி குறைவாக இருக்கிறது என்று நம்மில் பலரும் கூல் டிரிங்ஸ் குடிக்கும் பழக்கம் இருக்கும். அதிலும், கூல் டிரிங்ஸ் தொண்டையில் ஜில்லென்று இருக்கவேண்டும் என்று ஃபிரிட்ஜில் இருந்து அப்படியே எடுத்துக்குடிப்போம். அப்படி குடிக்கும்போது, உடலில் இரத்த ஓட்டம் சீராவது தடைபடும். இவை நாள் முழுக்க செரிமானத்தை உண்டு செய்யும். அதாவது, செரிமான அமிலத்தை சுரந்துக்கொண்டே இருக்கும். அதன் விளைவு குடல்புண், அல்சர் தான்.
இனிமே இந்த தப்பை செய்யாதீர்கள். அதற்கு பதிலாக வெதுவெதுப்பான இளஞ்சூடான நீர் குடிக்கலாம். ஒருவேளை இது பிடிக்கவில்லை என்றால், முந்தின நாள் இரவே சிறிதளவு சீரகத்தை 1 டம்ளர் அளவு தண்ணீரில் கொதிக்க வைத்து மறுநாள் காலை குளிரவைத்து குடிக்கலாம்.
காலையில் லேட்டாக எழுந்திருத்து அரக்க பறக்க வேலை கிளம்புபவர்கள், காலை ஆதாரமாக பழங்களை எடுத்துக்கொள்ளும் பழக்கம் இருக்கும். பழங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது தான். இருப்பினும், ஒரு சில பழங்களை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்ற வரைமுறை இருக்கிறது. குறிப்பாக, சிட்ரஸ் நிறைந்த பழங்களை காலை நேரத்தில் சாப்பிடக்கூடாது. ஏனென்றால், இரவு முழுவதும் இரப்பையில் சுரக்கும் அமிலத்தோடு இந்த சிட்ரஸ் பழங்கள் சேரும் போது, நெஞ்செரிச்சல் பிரச்சனையை உருவாக்கும்.
தொடர்ந்து சிட்ரஸ் பழங்களை எடுத்துக்கொள்ளும் போது அல்சர் வரை கொண்டு போய் நிறுத்திவிடும். அதேபோல, காலை நேரத்தில் வாழைப்பழத்தையும் சாப்பிடக் கூடாது. ஏனென்றால், இதில் மெக்னீசியம் அதிகம் இருப்பதால், இதய நோய்களுக்கு காரணமாகிவிடும். நம்மில் சிலருக்கு தக்காளி பழத்தை சாப்பிடும் பழக்கும். அதையும் காலை நேரத்தில் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக, கிவி, பப்பாளி, பெர்ரி, ஆப்பிள் போன்ற பழங்களை சாப்பிடலாம். இதையும் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளாமல், இளஞ்சூடான வெந்நீருக்கு பிறகு எடுத்துக்கொள்வது நல்லது.
நம்மில் பலருக்கும் தயிர் என்றால் உயிர். அதுமட்டுமல்லாமல், நம்ம அம்மாக்களும் காலையில் ஸ்கூல் போகும் பிள்ளைகளுக்கு தயிர் சாப்பாடு கொடுக்கும் பழக்கமும் இருக்கும். அதேபோல், பழைய சோற்றில் தயிர் சேர்த்து சாப்பிடும் பழக்கமும் இருக்கும். பாலை காட்டிலும் தயிர் மிகவும் நல்லது தான். ஆனால், இதை காலை உணவாக சாப்பிடும்போது இவற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அமிலமானது அழித்துவிடும். இதனால் எந்த நன்மையும் உடலுக்கு கிடைக்காது. எனவே, காலை நேரத்தில் தயிர் சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள். அதேபோல், காலை நேரத்தில் பேக்கரி உணவுகள், ஃபாஸ்புட் உணவுகள் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…