சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய நம்முடைய பாரம்பரியமான உணவு வகைகளில் அதிரசமும் ஒன்று. அதிலும் வெல்லத்தை கொண்டு செய்யப்படும் அதிரசத்திற்கு சுவையே தனி என்று தான் சொல்ல வேண்டும். வீட்டில் செய்தால் சரியான பக்குவம் வராது என்ற காரணத்தால், நம்மில் பலரும் கடைகளில் வாங்கி சாப்பிடுவோம். எந்த பண்டியாக இருந்தாலும் இந்த பலகாரம் இல்லாமல் அது முழுமையடையாது. சரி, வாங்க ஆரோக்கியம் நிறைந்த அதிரசத்தை மிகவும் சுலபமான முறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1/2 கிலோ
வெல்லம் - 1/2 கிலோ
ஏலக்காய், சுக்கு, நெய் - சிறிதளவு
சோடா உப்பு - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 1 லிட்டர்
குறிப்பு: கடையில் பச்சரிசி வாங்கும்போது, மாவு பச்சரிசி என்று கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். வெல்லத்திலும் பாகு வெல்லமாக கிடைத்தால் அதிரசத்தின் சுவை கூடுதலாக இருக்கும்.
செய்முறை:
முதலில் பச்சரிசியை 3 முறை நன்றாக தண்ணீர் ஊற்றி கழுவிவிட்டு, மீண்டும் தண்ணீர் ஊற்றி 3-4 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக்கொள்ளுங்கள். பின்னர் தண்ணீரை வடிகட்டிவிட்டு, அரிசியில் ஈரப்பதம் இல்லாதவாறு ஒரு வெள்ளை காட்டன் துணியில் கொட்டி உலர்த்திக்கொள்ளவும்.
இப்போது இந்த அரிசியை கொஞ்சம் கொஞ்சம் மிக்ஸியில் போட்டு 75% மாவாகவும், 25% குருணையாகவும் இருக்கும்படி அரைத்துக்கொள்ளுங்கள். இந்த மாவை அப்படியே ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.
பின்னர், அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து வெல்லத்தை தூள் செய்து போட்டு, 1/2 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து கொதிக்கவிட வேண்டும். அடிபிடிக்காமல் இருக்க தொடர்ந்து கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும். கம்பி பதம் வந்தவுடன் அடுப்பை அணைத்துவிடுங்கள். [பாகை காய்ச்சி ஒரு துளியை தண்ணீர் இருக்கும் ஒரு பாத்திரத்தில் போட்டால், இலகுவாகவும் இல்லாமல், கெட்டியாகவும் இல்லாமல் கம்பி போல நீண்டு விழுந்தால் கம்பி பதம்]
இப்போது பொடித்த ஏலக்காய் மற்றும் சுக்கு சேர்த்துக்கொள்ளுங்கள் பாகுவில் சேர்த்துக்கொள்ளுங்கள். காய்ச்சின பாகு இளஞ்சூட்டாக இருக்கும்போதே அகலமான பாத்திரத்தில் தயாராக இருக்கும் அரிசி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊறி, கரண்டியை கொண்டு நன்றாக கலக்க வேண்டும்.
கட்டிபடாமல் தொடர்ந்து கிளறிவிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இந்த கலவை சூடாக இருக்கும்போது மூடி போட்டு மூடக்கூடாது. கொஞ்சம் நேரம் நன்றாக ஆறிய பின்பு மூடி வைத்துக்கொள்ளலாம். இதை 7-8 மணி நேரம் அப்படியே ஊறவிடவும். 8 மணி நேரத்திற்கு பிறகு மாவு நன்றாக கெட்டியாக மாறிவிடும்.
அந்த மாவை எடுத்து அகலமான தட்டில்போட்டு சப்பாத்தி மாவு பிசைவது போல பிசைந்து சின்ன சின்ன உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை மாவு ரொம்ப கெட்டியாக இருந்தால் சுடுதண்ணீர் தெளித்து பிசைந்துக் கொள்ளலாம்.
ஒரு வாழை இலையில் நெய் தடவிக்கொண்டு அந்த உருண்டைகளை அதில் வைத்து தட்டி நடுவில் ஒரு ஓட்டை போட்டு கொதிக்கும் எண்ணெயில் போட்டு சிவக்க எடுத்து எண்ணெய் வடியவிட்டு, மற்றொரு பாத்திரத்தில் போட்டு வைத்துக்கொள்ளலாம். அவ்வளவு தான் சுவையான அதிரசம் தயார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…