கொளுத்தும் வெயில் காலத்தில் எப்படா இந்த மழைக்காலமும், குளிர்காலமும் வரும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருப்போம். அதுவே, மழைக்காலமும் குளிர்காலமும் வந்துவிட்டால் எப்படா இந்த சீசன் முடியும் என்று திட்டுவதும் உண்டு. ஏனென்றால், இந்த சீசனில் குளிர் ஒருபக்கம் வாட்டி எடுத்தாலும், மறுபக்கம் ஏராளமான நோய்த்தொற்றும் வந்து, நம்மை போட்டு பாடாய் படுத்திவிடும். பெரியவர்களாக இருந்தால் கூட சமாளித்துவிடலாம். ஆனால், இந்த நோய்த்தொற்றுகளில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது என்பது பெரும் சவாலான விஷயம். அதுவும் உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு எந்த காலநிலையாக இருந்தாலும் மிகவும் எளிதில் பாதிப்புக்கு உள்ளாகிவிடுவார்கள்.
எனவே, எந்த காலமாக இருந்தாலும் சரி குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தக்கூடிய ஊட்டச்சத்து மிக்க உணவுகளை கொடுப்பதன் மூலம் அவர்களை எந்த நோயும் அண்டாமல் பார்த்துக்கொள்ள முடியும். அந்தவகையில், குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்க வேண்டிய உணவுகள் பற்றி பார்க்கலாம்.
வெல்லம் உடலில் வெப்பத்தை உண்டாக்கி, இந்த குளிர்காலத்தில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் ஒரு சக்திவாய்ந்த உணவாக இருக்கிறது. எனவே, தினமும் சிறிதளவு வெல்லத்தை சேர்த்து உங்க குழந்தைகளுக்கு கொடுங்கள். அல்லது வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிதளவு வெல்லத்தை கலந்து காலை நேரத்திலும் கொடுக்கலாம். இது உங்க குழந்தையின் உடலை சூடாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ளும். பெரியவர்களும் இதை முயற்சிக்கலாம்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இருக்கும் பீட்டா கரோட்டின், வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து போன்றவை உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவடையச் செய்து, நோய் தொற்று ஏற்படுவதை தடுக்கிறது. சர்க்கரை வள்ளிக்கிழங்கை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் ஏற்படும் அல்சர் விரைவில் குணமாகிறது.
பேரீச்சம் பழத்தில் இரும்புச்சத்து மட்டுமல்ல, வைட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்தும் அதிகம். தினமும் 2 பேரீச்சம்பழத்துடன் ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு வந்தால் ரத்தம் விருத்தியடையும். மேலும், ஞாபக சக்தியும் கூடும், எலும்புகளை பலப்படுத்தும். உங்க குழந்தைகளுக்கு பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து கொடுங்கள். இது இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்து, நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும்.
இயற்கையிலேயே இனிப்பு சுவைக்கொண்ட இந்த பூட்ரூட் காயில் நார்ச்சத்து அதிகம். எனவே, பீட்ரூட்டை மற்ற சமயங்களில் சாப்பிடுவதை விடவும் குளிர்காலங்களில் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இது ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் கண்களுக்கு பார்வை திறனை மேம்படுத்துகிறது. இது குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய் தொற்றை குறைக்கிறது.
தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் போதும், ஆப்பிளுக்கு நிகரான சத்துக்களை பெற முடியும். நெல்லிக்காயில் இருக்கும் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல், இதில் இருக்கும் கால்சியம் சத்து உங்க குழந்தைகளின் எலும்புகளை உறுதியாக்கும். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று நெல்லிக்காயாவது சாப்பிட கொடுங்கள்
குளிர்காலத்தில் சருமம் வறட்சி ஏற்படுவது இயல்பான ஒன்று தான். ஆனால், சிட்ரஸ் பழங்களை குளிர்காலத்தில் தொடர்ந்து சாப்பிடுவதால் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைப்பதோடு சருமத்திற்கு பளபளப்பையும் சேர்க்கிறது. மேலும், இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ஜலதோஷம், காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ்களிடமிருந்து பாதுக்காக்கிறது. ஆனாலும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…