இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பெண்களே உஷார்.. போலீசார் அறிவுறுத்தல்!!
Updated:
இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ள பெண்களின் புகைப்படத்தை மார்பிங் செய்து, மிரட்டிய இளைஞர்களை திருநெல்வேலி போலீசார் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் விகே.புரம் அருகே உள்ள அகஸ்தியர்பட்டியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அழகுக்கலை நிபுணராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், அவரது வாட்சப்பிற்கு, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அந்த இளம் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பியுள்ளதாக தெரிகிறது.
மேலும், அந்த நபர் ஆபாச வீடியோ கால் செய்யுமாறு தொடர்ந்து மிரட்டி வந்த நிலையில், இளம்பெண் திருநெல்வேலி மாவட்ட எஸ்பி சரவணனிடம் புகார் அளித்தார். இந்த புகார் மீது மாவட்ட சைபர் கிரைம் போலீசார், தொழில்நுட்ப உதவியுடன் நடத்திய விசாரணையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தென்காசி மாவட்டம், கீழப்பாவூரைச் சேர்ந்த 22 வயதான பிரதீப் என தெரிய வந்துள்ளது.
இதையடுத்து பிரதீப்பை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ஒரு ஸ்மார்ட் போன் மற்றும் 4 சிம் கார்டுகள் கைப்பற்றினர். அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், இன்ஸ்டாகிராம் தளத்தைப் பயன்படுத்தி, ரீல்ஸ் பதிவிடும் இளம் பெண்களின் புகைப்படத்தை தனியாக எடுத்து ஆபாசமாக மார்பிங் செய்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி பாலியல் இச்சைகளை தீர்த்துக் கொண்டது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக முன் வந்து புகார் அளிக்க வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், சமூக வலைதளத்தில் எச்சரிக்கையாக இருக்குமாறும், ஆபாச மிரட்டல்கள் வந்தால் உடனே காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.