மகா சிவராத்ரி நான்கு கால பூஜை - நேரம், வழிபாடு, சிறப்பு, பலன்கள் | Mahashivaratri puja vidhi in tamil
Updated:
இந்த அகில உலகில் மிகப்பெரிய சக்தியான சிவபெருமானைப் போற்றும் வகையில் கொண்டாடப்படும் நாள் தான் மஹா சிவராத்ரி. அன்று சிவனின் பக்தகொடிகள் நாள் முழுவதும் உணவு எடுத்துக்கொள்ளாமல் விரதம் இருந்து, தூங்காமல் ஈசனை தரிசிப்பார்கள். இப்படி செய்வதால் நாம் முழுமையாக சிவபெருமானிடம் சரணடைந்து, பாவங்களை நீங்கி மகிழ்ச்சியாக வாழலாம் என்பது ஐதீகம். இவ்ளோ சிறப்பு மிக்க மஹாசிவராத்ரி அன்று நான்கு கால பூஜை வழிபாடு நடைபெறும். ஒவ்வொரு பூஜையும் எந்த நேரத்தில், எந்த பொருளைக் கொண்டு பூஜை செய்ய வேண்டும் மற்றும் அதற்கான பலன்கள் என்ன என்பதை விரிவாக இந்த பதிவில் பார்ப்போம்.
மஹா சிவராத்ரி நான்கு சாம பூஜை நேரம்
முதல் கால பூஜை - இரவு 7:30 மணிக்கும்,
இரண்டாம் கால பூஜை - இரவு 10:30 மணிக்கும்,
மூன்றாம் கால பூஜை - நள்ளிரவு 12:00 மணிக்கும்,
நான்காம் கால பூஜை - அதிகாலை 4:30 மணிக்கும் செய்யப்படுகிறது.
முதல் கால பூஜை
பிரபஞ்சத்தின் படைக்கும் கடவுளான பிரம்மா சிவனை பூஜித்த காலம் தான் முதல் சாம பூஜையாகும். அந்த நேரத்தில் சிவபெருமானுக்கு "பஞ்ச கவ்வியத்தால்" (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமயம், கோசாணம்) அபிஷேகம் செய்து வழிபாடு நடைபெறும். மேலும் மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும், தாமரைப் பூவால் அர்ச்சனையும், அலங்காரமும் செய்து, வென் பொங்கலை பிரசாதமாக படைத்து, நெய் தீபம் காட்டி பூஜை நடைபெறும்.
பலன்கள் - முதல் கால பூஜை நேரத்தில் நாம் விரதம் இருந்து சிவனை பிராத்தனை செய்வதன் மூலம் பிறவி காலத்தின் கர்மங்களில் இருந்து விடுபட்டு நற்பலன்களை அடையலாம்.
இரண்டாம் கால பூஜை
காக்கும் தெய்வம் விஷ்ணு பகவான் ஈசனை பூஜித்த காலம் தான் இரண்டாம் சாம பூஜை. ஆகையால் விஷ்ணு பகவானுக்கு பிடித்தமான பொருட்களைக் கொண்டு வழிபாடு நடைபெறும். அந்த நேரத்தில் பஞ்சாமிர்தத்தைக் கொண்டு அபிஷேகம் செய்து, சந்தன காப்பு சாற்றி, வெண்பட்டு ஆடையால் அலங்காரம் செய்து, அர்ச்சனைகள் செய்து, பாயசம் பிரசாதமாக படைத்து, நல்லெண்ணை தீபம் ஏற்றி இந்த பூஜை நிறைவு பெரும்.
பலன்கள் - மகா விஷ்ணு சிவனை பூஜித்த இந்த நேரத்தில் விரதம் இருந்து பூஜை செய்வதனால் அவர்கள் இருவரின் கிருபை கிடைத்து நாம் செல்வ செழிப்போடு வாழ அருள் கிடைக்கும்.
மூன்றாம் கால பூஜை
இது தான் மிகவும் முக்கியமான சாம பூஜையாகும். தேவர்களுக்கெல்லாம் தேவன் சிவனின் பாதியான சக்தி வடிவமாக அம்பாள் ஈசனை பூஜித்த காலம் இது. அந்த தருணத்தில் சிவனுக்கு தேன் அபிஷேகம் செய்து, பச்சை கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்து, சிவப்பு வஸ்திரம் அணிவித்து, ஜாதி மல்லி பூவைக் கொண்டு அர்ச்சனைகள் செய்து, "எள் அன்னம்" பிரசாதமாக படைத்து, இலுப்பை எண்ணெய் கொண்டு தீபமேற்றி வழிபாடு நடைபெறும்.
சிறப்பு - மஹா சிவராத்திரியின் மூன்றாம் சாம காலமானது லிங்கோத்பவ காலம் என்று கூறப்படுகிறது. சிவபெருமானுக்கு அம்பாள் பூஜை செய்த இந்த நேரத்தில் தான் அவர் லிங்கோத்பவராக காட்சியளித்தார் என்று கூறப்படுகிறது.
பலன்கள் - மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த மூன்றாம் சாம பூஜை ஈரத்தில் விரதம் இருந்து பிராத்தனை செய்வதால் சிவன் மற்றும் சக்தியின் அனுகிரகம் கிடைக்கும். அந்த நேரத்தில் நாம் என்ன வேண்டினாலும் அவர்கள் அதனை வரமாக தரும் காலம் இது.
நான்காம் கால பூஜை
முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜித்த காலமாக இந்த நான்காம் சாம பூஜை அமையும் என்று கூறப்படுகிறது. அப்போது ஈசனுக்கு குங்குமப்பூ சாற்றி, கரும்பு சாறு & பால் அபிஷேகம் செய்து, நந்தியாவட்ட பூவால் அலங்காரமும், அர்ச்சனையும் செய்து, சுத்தான்னம் [வெள்ளை சாதத்தில் நெய் சிறிது சேர்த்து] நைவெய்தியமாக படைத்து, தூப தீப ஆராதனைகளுடன், 18 வகை சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்யப்படுகிறது.
பலன்கள் - நாம் என்ன வேண்டி வழிபாடு செய்தோமோ அது கண்டிப்பாக நிறைவேறும்.
இந்த நான்கு கால பூஜையில் உங்களால் எல்லா பூஜையிலும் கலந்துக்கொள்ள முடியவில்லை என்றாலும், மூன்றாம் கால பூஜையை மட்டுமாவது செய்து வழிபடுங்கள். ஏனெனில் அது தான் மிகவும் சக்தி மற்றும் சிறப்பு வாய்ந்த கால பூஜையாகும்.