அனுமனுக்கு சீட்டுகளை கொடுத்த தமிழ் மக்கள்.. தியேட்டரில் டல்லடிக்கும் ஆதிபுருஷ்!
Updated:
சென்னை: ஆதிபுருஷ் இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் சூழலில் தமிழ்நாட்டில் அதன் டிக்கெட் விற்பனை டல்லடித்திருப்பதாக கூறப்படுகிறது.
ராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது. இதன் ட்ரெய்லரை படக்குழு ஒவ்வொரு மொழியிலும் தனித்தனியாக வெளியிட்டது.
ட்ரோல்களை சந்தித்த டீசர்:
கடந்த ஆண்டு இப்படத்தின் முதல் டீசர் வெளியானபோது அதில் இடம்பெற்ற கிராஃபிக்ஸ் காட்சிகள் சமூக வலைதளங்களில் கடும் ட்ரோலுக்கு உள்ளாகின. இதனையடுத்து படத்தின் கிராஃபிக்ஸ் தரத்தை மேம்படுத்த படக்குழு முடிவு செய்து அதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுவந்தது. இதனால் கடந்த ஜனவரியில் வெளியாக வேண்டிய படம் தள்ளிப்போக வேண்டிய சூழல் ஏற்பட்டது.
முன்னேறிய கிராஃபிக்ஸ் தரம்:
இதனையடுத்து கிராஃபிக்ஸுக்கான வேலைகளை முடித்த கையோடு வெளியான ட்ரெய்லர் ஓரளவுக்கு ஓகே என்ற நிலையில் இருந்தது. பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான பிரபாஸ் இந்தப் படம் மூலம் மேற்கொண்டு பிரபலம் அடைவாரா என அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர்.
அனுமருக்கு ஒரு சீட்:
இதற்கிடையே ஏற்கனவே படத்தின் முதல் டீசர் ட்ரோலுக்கு உள்ளான சூழலில் ஆதிபுருஷ் படக்குழு படம் வெளியாகும் ஒவ்வொரு திரையரங்கிலும் அனுமருக்கு என்று ஒரு சீட் ரிசர்வ் செய்யப்படும் என தெரிவித்தது. இதனை பார்த்த நெட்டிசன்கள் ஆதிபுருஷ் படத்தை மீம்ஸ்களால் வைத்து செய்தனர்.
படம் ரிலீஸ்:
இப்படி பல ட்ரோல்களை சந்தித்த சூழலில் ஆதிபுருஷ் படமானது இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது. தியேட்டரில் அனுமனுக்கு சீட், ஹைதராபாத் தியேட்டரில் குரங்கு எண்ட்ரி, ஆதிபுருஷை விமர்சித்ததாக ஒரு ரசிகர் மீது தாக்குதல் என இன்று காலையிலிருந்தே ஆதிபுருஷ்தான் சினிமாவின் தலைப்பு செய்தியாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதேசமயம் படத்துக்கு கலவையான விமர்சனமே கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டில் டல்:
அதேபோல் இந்தியாவின் பிற மாநிலங்களில் ஆதிபுருஷ் டிக்கெட் விற்பனை டீசண்ட்டாக இருப்பதாக கூறப்பட்டாலும் தமிழ்நாட்டில் அதன் விற்பனை டல்லாக இருக்கிறது என பேச்சு எழுந்திருக்கிறது. ஆன்லைன் புக்கிங்கில் பல சீட்டுகள் காலியாகவே இருக்கின்றன.
அதேபோல் சென்னையில் பல திரையரங்குகளில் மொத்தமாகவே பத்துக்கும் குறைவான டிக்கெட்டுகள் விற்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. அதேசமயம் இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் மொத்த சீட்டுகளையும் அனுமனுக்கே தமிழ் மக்கள் கொடுத்துவிட்டார்கள் என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.