கோவை: பாஜக எம்எல்ஏ அலுவலகத்திற்குள் புகுந்து சலசலப்பை ஏற்படுத்தி விட்டு மர்மமான முறையில் உயிரிழந்த வாலிபர் பேருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சிசிடிவி காட்சிகளை போலீசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.
கோவை ஓசூர் சாலையில் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகம் இயங்கி வருகிறது. தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ள பாஜகவின் வானதி சீனிவாசன், இந்த அலுவலகத்தை பயன்படுத்தி வருகிறார். நேற்று மாலை 3.30 மணி அளவில் அலுவலக உதவியாளர் விஜய் என்பவர் பணியில் இருந்த போது, மர்ம நபர் ஒருவர் திடீரென அலுவலகத்திற்குள் புகுந்து உள் பக்கமாக கதவை தாளிட முயன்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய் அந்த நபருடன் போராடி அவரை அலுவலகத்தை விட்டு வெளியே தள்ளி விட்டார். இந்நிலையில் அந்த வாலிபர் மாலை 6.30 மணி அளவில் கோவை-அவிநாசி சாலையில் அண்ணா சிலை அருகே சாலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் வாலிபரின் உயிரிழப்பு தொடர்பாக போலீசார் வெளியிட்டுள்ள புதிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில், அந்த வாலிபர் சாலையை கடந்து சென்று வேகமாக வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்றின் மீது மோதி தற்கொலை செய்து கொண்டது பதிவாகியுள்ளது.
அந்த வாலிபர் ஏன் இவ்வாறு ஈடுபட்டார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வாலிபர் மது போதையில் இருந்தாரா? அல்லது கஞ்சா போதையில் இருந்தாரா? அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவரா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாலிபரின் பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் விசாரணை தீவிரமடையும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…