ஓணம் பண்டிகை கேரளா மாநிலத்தின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று.
மகாபலி சக்கரவர்த்தி என்ற அரசர் பக்த பிரகலாதனின் பேரன். என்ன தான் அசுர குலத்தில் பிறந்திருந்தாலும், தர்ம செய்வதில் சக்கரவர்த்தி. மலையாள தேசம்தான் மகாபலி சக்கரவர்த்தி ஆண்டு வந்த பகுதியாக இருந்தது. முப்பத்து முக்கோடி தேவர்களும் அதிசயப்படும்படியும், பொறாமை கொள்ளும் வகையிலும் நல்லாட்சி செய்தார் மகாபலி. அவரின் ஆட்சியின் கீழ் நாடு செழிப்பாகவும், மக்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தனர்.
மகாபலியின் புகழ் பலதிசை எங்கும் பரவியது. யாராவது இல்லை என்று வந்து நின்றால் அவர்களுக்கு கேட்டதைக் கொடுக்கும் வள்ளல் தன்மை கொண்டவர். அவரை அசுர குரு சுக்கிராச்சாரியார் வழிநடத்தி வந்தார். இருப்பினும் மகாபலிக்கு கர்வமும் அதிகம் இருந்தது. மகாபலி உலகத் தலைமை பதவி வேண்டி ஒரு யாகம் செய்ய விரும்பினார். அந்த யாகம் நிறைவேறிவிட்டால், இந்திரனின் பதவிக்கே ஆபத்து வந்துவிடும். இதையறிந்த தேவர்கள் மகாபலி சக்கரவர்த்தியுடன் போரிட்டனர், இதில் மகாபலி வென்றார்.
இதனால் அச்சமடைந்த தேவர்கள், மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். தேவர்களை காப்பது தனது கடமை என கருதிய மகாவிஷ்ணு, வாமன அவதாரம் எடுத்தார். மண்ணுலகில் விஷ்ணுவின் 5வது அவதாரமாக காஸ்யப முனிவர், திதி தம்பதிக்கு மகனாக அவதரித்திருந்தார். மகாபலி சக்கரவர்த்தி தன் வேள்வி நிறைவு செய்யும் விதமாக, மக்களுக்கு தான, தர்மங்கள் செய்ய தொடங்கினார். இதில் தான தர்மங்கள் செய்து முடிக்கும் போது வாமனன் அங்கு வந்தார்.
வாமனனைப் பார்த்ததும், மகாபலி தாமதமாக வந்துவிட்டீர்களே. இப்போது தான் தானம் கொடுப்பதை நிறைவு செய்தேன் என்றார். அதற்கு வாமனனோ, நானோ மூன்றடி உயரம் கொண்ட சிறுவன். நான் பெரிதாக எதையும் கேட்க மாட்டேன், என் உயரத்தைப் போலவே மூன்றடி நிலம் மட்டும் கொடுத்தால் போதும் என்றார். அப்போது அசுர குரு சுக்ராசாரியார், இவர் விஷ்ணுவின் அவதாரமாக தோன்றுகிறது. அவருக்கு தானம் அளிப்பதற்கு முன் சற்று யோசியுங்கள் என்றார்.
ஆனால் மகாபலி சக்கரவர்த்தியோ, மகாவிஷ்ணுவே என்னிடம் தானம் பெற வந்துள்ளார் என்றால் எந்தளவிற்கு, நான் சிறந்தவன். நான் தானம் கொடுத்தே தீருவேன் என்றார். உடனே வாமனனாக வந்த பகவான், ஓங்கி உயர்ந்து ஓர் அடியால் பூமியையும், மற்றுமோர் அடியால் விண்ணையும் அளந்து முடித்து, மூன்றாவது அடிக்கு இடம் எங்கே என்று கேட்டார். அதற்கு மகாபலி தன் தலை மீது வைக்குமாறு சொன்னார். மகாபலியின் தலையில் வாமனன் கால் வைத்ததும், மகாபலி பாதாளலோகம் சென்றார்.
அசுரராக இருந்தாலும், மக்களுக்கு நல்லனவற்றை செய்த மகாபலிக்கு என்ன வரம் வேண்டும் என கேட்டார். அப்போது மகாபலி 'வருடம் ஒரு முறை இதே நாளான திருவோணத்தில், நான் இந்த பூமிக்கு வந்து எல்லா மக்களும் மகிழ்ச்சியோடு வாழ்வதை பார்த்து செல்ல வேண்டும்' என்னும் வரத்தை கோரினார். எம்பெருமானும் வரத்தை அருளினார். மகாபலி சக்கரவர்த்தி ஆண்டு தோறும் மக்களை காண வரும் இந்த நாளே 'ஓணம் பண்டிகை' ஆக போற்றி கொண்டாடுகிறார்கள்.
அனைவருக்கும் ஓணம் நல்வாழ்த்துக்கள்!!
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…