Tue ,Mar 19, 2024

சென்செக்ஸ் 72,058.11
-690.31sensex(-0.95%)
நிஃப்டி21,832.60
-223.10sensex(-1.01%)
USD
81.57

உலகம்

பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

Baskaran July 13, 2023

பிரான்ஸ் தேசிய தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு எலிசபெத் போர்ன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பிரான்சில் தேசிய தினம் நாளை கொண்டாடப்படுகிறது.இதில் கெளவுர விருந்திரனாக கலந்து கொள்ள அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்ற பிரதமர் இன்று விமானம் மூலம் பிரான்ஸ் சென்றார். விமானத்தில் இருந்து இறங்கிய பிரதமர் மோடிக்கு, எலிசபெத் போர்ன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இந்த தேசிய தின விழா கொண்டாட்டத்தில் அந்நாட்டின் பாதுகாப்பு படையினருடன், இந்தியாவின் முப்படையைச் சேர்ந்த 269வீரர்களும் பங்கேற்கின்றனர். இந்த பயணத்தின் போது பிரான்ஸிடம் இருந்து கடற்படை பயன்பாட்டிற்காக 26ரபேல் விமானங்களும், கூடுதலாக 3ஸ்கார்பியன் நீர்மூழ்கி கப்பல்களை வாங்கவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இது சுமார் ரூ.90ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தமாகும். பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியாவிற்கு திரும்பும் மோடி, வழியில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஜூலை 15ஆம் தேதி செல்கிறார். அப்போது அந்நாட்டு அதிபரும், அரசருமான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிவிட்டர் பயன்படுத்த புதிய கட்டுப்பாடு: எலான் மஸ்க் அதிரடி

Baskarans July 03, 2023

சான் பிரான்சிஸ்கோ: சமூக வலைதளமான, 'டிவிட்டர்' பயன்படுத்த பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டிவிட்டர் சமூக வலைதளத்தை எலான் மஸ்க் கடந்தாண்டு விலைக்கு வாங்கினார். அன்றுமுதல் பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். குறிப்பாக அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக தன்னை அறிவித்து, பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். இதில் முதற்கட்டமாக 75 சதவீத ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியதோடு, டிவிட்டர் பயன்படுத்துபவர்களுக்கு கட்டணம் விதிப்பது உள்பட பல அறிவிப்புகளை வெளியிட்டார். இப்படி பயனர்களுக்கு பல்வேறு அதிர்ச்சியை அளித்து வரும் எலான் மஸ்க் நேற்று முன்தினம் டிவிட்டர் பயன்படுத்துபவர்களுககு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தார். அதாவது, டிவிட்டர் நிறுவனத்தில் கணக்கு வைத்துள்ள அங்கீகரிக்கப்பட்ட பயனாளிகள், 6,000 பதிவுகளையும், அங்கீகரிக்கப்படாதவர்கள், 600 பதிவுகளை மட்டும் ஒரே நாளில் பார்க்க முடியம் என, அறிவிக்கப்பட்டது. இதற்கு அதிகளவில் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து 10 ஆயிரம் பதிவுகளாகவும், 1,000 பதிவுகளாகவும் உயர்த்தி அறிவித்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன், தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், டிவிட்டர் வலைதளத்தில் கணக்கு வைக்காதவர்களும் பதிவுகளை பார்க்கும் வசதி இருந்தது. இனி, பயனாளர்கள், பதிவுகளை பார்ப்பதற்கு, சமூக வலைதளத்துக்குள் பதிவு செய்து நுழைய வேண்டும். குறிப்பாக சமூக வலைதளத்தில் அதிகளவில் பதிவுகள் வெளியிடப்படுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பலரும் தொடர்ச்சியாக அதிகளவில் தகவல்களை குவித்து வருவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, அதிகளவில் பதிவுகளை பார்த்து பழகிய சிலர், தங்களால் டிவிட்டர் பதிவுகளை பார்க்க முடியாமல் முடக்கப்பட்டுள்ளதாக புகார் எழுப்பியுள்ளனர்.

பிரான்ஸில் 17வயது சிறுவன் சுட்டுக்கொலை: வன்முறைக்கு அதிபர் கண்டனம்...!

Baskarans June 29, 2023

பிரான்சிஸ் ஏற்பட்ட வன்முறை மோதல்கள் மற்றும் அமைதியின்மைக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரான்சின் தலைநகரான மேற்கு பாரீஸ் புறநகர் பகுதியான நான்டெர்ரே என்ற பகுதியில் 17வயது சிறுவன் காரில் சென்றுக் கொண்டிருந்தான். வாடகைக்கு கார் எடுத்துச் சென்ற சிறுவன் தனது மூன்று நண்பர்களுடன் சென்ற போது போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக தெரிகிறது. இதனால் பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் காரை நிறுத்த முயன்றனர். அப்போது ஒரு நிமிடம் மட்டுமே காரை நிறுத்திய சிறுவன் உடனே காரை எடுத்துள்ளான். அப்போது போலீசார் துப்பாக்கியால் சிறுவனை சுட்டனர். இதில் கார் நிலைதடுமாறி சாலையோர தடுப்பில் மோதியது. போலீசார் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் சிறுவனை சுடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள கார்கள், காவல் நிலையம் உள்ளிட்டவைகளுக்கு தீ வைக்கப்பட்டது. போராட்டகாரர்களை தடுக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இந்நிலையில் வன்முறை மோதல்கள் மற்றும் அமைதியின்மைக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைனுக்கு ஆயுதங்கள் - ரஷ்யாவை தீர்த்துகட்ட அமெரிக்கா உதவி | Russia Ukraine War

Abhinesh A.R June 27, 2023

ரஷ்யாவின் தாக்குதலை தாக்குப்பிடித்து ஒரு வருடமாக போர் புரிந்து வரும் உக்ரைன் நாட்டிற்கு 41ஆவது முறை ஆயுதங்களை அனுப்பி அமெரிக்கா உதவிக்கரம் நீட்டியுள்ளது.

பிரிட்டிஷ் வோல்ட் உரிமையாளரின் அலுவலகங்களில் சோதனை!

Abhinesh A.R June 26, 2023

பிரிட்டிஷ் வோல்ட் நிறுவன உரிமையாளரின் அலுவலகங்களை ஆஸ்திரேலிய வருமான வரித் துறையினர் சோதனையிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரதமர் மோடி எகிப்து சுற்றுப்பயணம்: உயரிய விருது வழங்கி கவுரவிப்பு..!

Baskarans June 25, 2023

கெய்ரோ: எகிப்து நாட்டிற்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்கா சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக எகிப்து நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு 1000ஆண்டுகள் பழமை வாய்ந்த அல் ஹகீம் மசூதியைப் பார்வையிட்டார். மசூதியில் காட்சிப்படுத்தப்பட்ட பொருட்கள், படங்கள் பார்வையிட்ட பிரதமருக்கு மசூதி நிர்வாகத்தினர் அவருக்கு நினைவு பரிசு வழங்கினர். இதை தொடர்ந்து அவர்களுடன் கலந்துரையாடினார். பிறகு ஹொலியாபொலிஸ் சென்ற பிரதமர், முதலாம் உலகப்போரில் வீரமரணம் அடைந்த 3,727 இந்திய வீரர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்திய நேரப்படி காலை எகிப்து பிரதமர் முஸ்தபாவை சந்தித்த பிரதமர், இருநாட்டுகளுக்கு இடையேயான உறவுகள், வர்த்தகம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார். பிறகு அந்நாட்டு தொழிலதிபர்களையும் சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து அந்நாட்டின் அதிபர் அப்தெல் பத்தா அல் சிசியை சந்தித்தார். அப்போது இருவரும் கை குலுக்கு தங்களது அன்பை வெளிப்படுத்தினர். பிறகு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருதான ‛ஆர்டர் ஆப் தி நைல்' விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அந்நாட்டு அதிபர் அப்தெல் படா அல் சிசி வழங்கி மோடியை கவுரவப்படுத்தினார்.

செயற்கை இறைச்சி விற்பனைக்கு அனுமதி: அமெரிக்க அரசு நடவடிக்கை..!

Baskarans June 23, 2023

வாஷிங்டன்: அமெரிக்காவில் மக்கள் பயன்பாட்டிற்கு செயற்கை கோழி இறைச்சியை விற்பனை செய்ய அனுமதி அரசு அளித்துள்ளது. ஆய்வகங்களில் விலங்குகளில் தசையில் இருந்து எடுக்கப்படும் திசுக்களை வைத்து வளர்க்கப்படும் இறைச்சியானது வளர்ப்பு இறைச்சி அல்லது செயற்கை இறைச்சி என்று அழைக்கப்படுகிறது. இந்த இறைச்சியை விற்பனை செய்ய அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. குறிப்பாக கோழி உயிரணுக்களில் இருந்து உருவாக்கப்படும் இறைச்சியை விற்க அந்நாட்டு அரசு அப்சைடு புட்ஸ், குட்மீட் ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த இறைச்சியை விற்பனை செய்யும் போது, ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட இறைச்சி என்று வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கொழுப்பு, எலும்பு இல்லாத இறைச்சிக்கான உற்பத்தி செலவு அதிகம் என்றாலும், சில நிறுவனங்கள் இதை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். அமெரிக்காவை தொடர்ந்து முன்னதாக சிங்கப்பூரில் செயற்கை இறைச்சி விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

யோகா அனைத்து மதங்களுக்கும் பொதுவானது: பிரதமர் மோடி பேச்சு..!

Baskarans June 21, 2023

நியூயார்க்: உலகத்தில் உள்ள ஒட்டு மொத்த நாடுகளுக்கும் இந்தியா அளித்த பரிசு யோகா என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற உலக யோகா தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். இதில் 108 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்தியாவின் மற்ற பாரம்பரியத்தைப் போலவே யோகாவும் சக்தி வாய்ந்தது. காப்புரிமை மற்றும் ராயல்டி இல்லாதது. இது அனைத்து மதங்களுக்கும் பொதுவானது. குறிப்பாக ஒட்டு மொத்த உலகிற்கும் இந்தியா அளித்த பரிசு யோகா. அமைதியான, தூய்மையான பசுமையான மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்க யோகாவின் சக்தியை பயன்படுத்துவோம். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற இலக்கை நினைவாக்க ஒன்றிணைவோம் என்றார். ஐ.நா தலைமையகத்தில் நடந்த யோகா நிகழ்ச்சியில் அதிக நாடுகளை சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றனர் என்ற கின்னஸ் சாதனையை படைத்தது.

18 நாடுகளுக்கு 18 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி..! இந்தியாவுக்கு ஐ.நா.சர்வதேச வேளாண் மேம்பாட்டு நிதியம் பாராட்டு..!!

Saraswathi June 20, 2023

ரஷ்யா-உக்ரைன் போரால் உணவுப் பாற்றாக்குறை ஏற்பட்ட 18 நாடுகளுக்கு 18 லட்சம் டன் கோதுமையை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இதனை ஐ.நாவின் வேளாண் வளர்ச்சிக்கான சர்வதேச நிதியம் பாராட்டியுள்ளது. ஜி-20 வேளாண் அமைச்சர்கள் மாநாட்டையொட்டி ஐ.நா.,வின் வேளாண் மேம்பாட்டு சர்வதேச நிதியத்தின் தலைவர் அல்வரோ லாரியோ இந்தியா வந்துள்ளார். அவர் தனியா நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், இந்தியாவின் ஜி-20 தலைமை, உணவு முறைகளை மாற்றியமைக்கும் ஆற்றலை கொண்டுள்ளது. பயிர்சாகுபடி, அறுவடை, பதப்படுத்துதல், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்து செல்வது, சந்தைப்படுத்துதல், உணவு நுகர்வு ஆகியவற்றை உள்ளடக்கிய உணவு அமைப்பு முறையானது கடந்த சில ஆண்டுகளாக பலவீனமாகியுள்ளது. கொரோனா தொற்றுப்பரவல், ரஷ்யா-உக்ரைன் போர் , காலநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்சனைகள் உலக உணவு பாதுகாப்பை பெருமளவு பாதித்துள்ளன. இதனால், ஆப்பிரிக்க நாடுகளில் கடும் உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உலகளவில் உணவு மற்றும் எரிபொருள் விலை உயர உக்ரைன் போர் வழிவகை செய்தது. இதனால், ஏழை நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. உக்ரைன் போரினால், கடந்தாண்டு உணவு பற்றாக்குறையை எதிர்கொண்ட 18 நாடுகளுக்கு இந்தியா 18 லட்சம் டன் கோதுமையை ஏற்றுமதி செய்துள்ளது. இது பாராட்டுக்குரிய செயலாகும். தெற்குலக நாடுகளின் ஒத்துழைப்பில், தமது சிந்தனைமிக்க தலைமையை இந்தியா வெளிப்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

பிரதமர் மோடி 5 நாள் அரசு முறைப் பயணம் - நாளை தனி விமானம் மூலம் அமெரிக்கா செல்கிறார்..!!

Saraswathi June 19, 2023

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நாளை(ஜூன்.20) தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார். அமெரிக்காவில் 3 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மோடி, 21ம் தேதி ஐ.நா தலைமையகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சிக்கு தலைமையேற்கிறார். இந்த விழாவில் பிரபல ஹாலிவுட் நடிகையும், பாடகியுமான மேரிமில்பென்னும் பங்கேற்கவுள்ளார். இவர் இந்தியாவின் 74வது சுதந்திரதினக் கொண்டாட்டத்தில் பங்கேற்று தேசிய கீதத்தை பாடி அசத்தியவர். ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதி பதவி ஏற்ற பின்னர், அரசுமுறை பயணம் மேற்கொள்வதற்கு அழைப்பு விடுத்துள்ள 3-வது உலக தலைவர் பிரதமர் மோடி ஆவார். இதற்கு முன்பு அவர் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் ஆகியோரை அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணமாக அழைத்து அவர்கள் சென்று வந்தனர். அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி தலைநகர் வாஷிங்டன் செல்கிறார். 22-ந் தேதி அங்கு அவருக்கு வெள்ளை மாளிகையில் அணிவகுப்பு மரியாதையுடன் கூடிய சம்பிரதாயபூர்வ வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. பின்னர் அதிபர் பைடனுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது, இரு தரப்பு உறவு, ராணுவ ஒத்துழைப்பு, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில் நுட்பங்களில் ஒத்துழைத்தல், எரிசக்தி, காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இந்தப் பேச்சு வார்த்தையின்போது இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் 22ம் தேதி இரவு பிரதமர் மோடிக்கு அதிபர் ஜோ பைடனும், அவரது மனைவி ஜில் பைடனும் சிறப்பு இரவு விருந்து அளிக்கவுள்ளனர். மேலும், நாடாளுமன்ற கீழ்சபை (பிரதிநிதிகள் சபை) சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி, மேல்சபை (செனட் சபை) ஜனநாயக கட்சி தலைவர் சுக் சூமர் ஆகியோரின் அழைப்பினை ஏற்று, அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். இது அமெரிக்கா தனது நெருங்கிய நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு வழங்கக்கூடிய கவுரவம் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, 23-ந் தேதி துணை அதிபர் கமலா ஹாரீசும், வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனும் இணைந்து பிரதமர் மோடிக்கு மதிய விருந்து அளிக்கவுள்ளனர். வாஷிங்டனில் இருந்து புறப்படுவதற்கு முன்னதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 அமெரிக்க வாழ் இந்தியர்களுடன் வாஷிங்டன் ரொனால்டு ரீகன் கட்டிடத்தில் பிரதமர் சந்திப்பும் நடைபெறுகிறது. அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, வரும் 24, 25-ந் தேதிகளில் பிரதமர் மோடி, எகிப்து நாட்டில் முதல் முறையாக சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அந்நாட்டு அதிபர் அப்தெல் பட்டா எல்சிசியின் அழைப்பினை ஏற்று பிரதமர் இந்த அரசு முறை சுற்றுப்பயணம் செல்கிறார். 2 நாட்கள் அங்கு பயணம் மேற்கொள்ளும் மோடி, தலைநகர் கெய்ரோவில் அதிபர் எல்சிசியுடன் பேச்சு வார்த்தை, அங்குள்ள இந்தியர்களுடன் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.