கோவை: சுந்தராபுரத்தில் உள்ள தனியார் கிடங்கிலிருந்த ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்களை உரிமையாளருக்கு தெரியாமல் விற்பனை செய்த 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை ராம்நகர் சரோஜினி வீதி பகுதியை சேர்ந்தவர் ஹைதர் என்பவரின் மகன் மனைவி ரஷிதா (46). இவரும் அவரது நண்பரும் சேர்ந்து கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் பவர் டூல்ஸ் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இதற்கான கிடங்கு சுந்தராபுரம் மதுக்கரை சாலையில் அமைந்துள்ளது. இவர்களுக்கு சொந்தமான மூன்று கடைகள் கோவை நஞ்சப்பா சாலை பகுதியில் அமைந்துள்ளது . கடந்த சில மாதங்களாக கிடங்கு இருப்பில் உள்ள உதிரி பாகங்களுக்கும், கடையில் உள்ள உதிரி பாகங்களின் பட்டியலுக்கும் நிறைய வித்தியாசம் இருந்து வந்தது.
இந்த சமயத்தில் நிறுவனத்தில் வேலை பார்த்த நந்தினி மற்றும் சிராஜ் ஆகியோர் வேலையிலிருந்து நின்று வேறு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தனர். தொடர்ந்து கிடங்கிலிருந்த பொருட்கள் கணக்கு குறைவாக இருந்ததால் ரக்சிதா ஏற்கனவே வேலை செய்த ஊழியர்களான நந்தினி மற்றும் சிராஜ் ஆகியோரை அழைத்துள்ளார். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் போலி ஆவணங்கள் மூலம் கிடங்கிலிருந்த பொருள்களை மற்றும் உதிரிபாகங்களை எடுத்து வேறு நிறுவனத்திற்கு விற்றது தெரியவந்தது.
இதன் மூலம் சுமார் ரூ.25 லட்சம் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரக்சிதா போத்தனூர் போலீஸில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருட்களை வாங்கிய பாத்திமா, ரோசட் பொருட்களை விற்ற நந்தினி, சிராஜ் ,ஜாகீர் ஆகிய ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…