பொள்ளாச்சி அருகே உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் இருவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, சாட்டை பட பாணியில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆதரவாக பள்ளி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர், பள்ளியில் பணியாற்றும் இயற்பியல் ஆசிரியர் ராமகிருஷ்ணன் மற்றும் தாவரவியல் ஆசிரியர் பாலச்சந்திரன் ஆகிய இருவரும் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, குழந்தைகள் உதவி இலவச எண்ணான 1098க்கு அழைத்து புகார் கொடுத்தார்.
இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு மையம் அளித்த புகாரின் அடிப்படையில் இரண்டு ஆசிரியர்களும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆதரவாக இன்று மாணவிகள் சாலைமறியல் செய்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள், தங்கள் பள்ளி ஆசிரியர்கள் மீது எந்த தவறும் கிடையாது என்றும் அவர்கள் மீது முறையான விசாரணையை மாவட்ட ஆட்சியர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை இணைந்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
சாலை மறியல் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வால்பாறை துணை கண்காணிப்பாளர் கீர்த்தி வாசன், ஆய்வாளர் ஹரிஹரன் மற்றும் கோட்டூர் காவல்துறையினர், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்து மாணவிகளை சமாதானப்படுத்தி பள்ளிக்குள் அனுப்பி வைத்தனர்.
இதனால் அங்கு ஒருமணிநேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாட்டை பட பாணியில் ஆசிரியர்களுக்கு ஆதரவாக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…