தஞ்சாவூரில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 8 மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள குறிச்சி என்ற கிராமத்தில் ஐபிஇஏ என்ற தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அருகிலுள்ள கிராமங்களை சேர்ந்த பல்வேறு மாணவ மாணவியரும் இந்த பள்ளியில் படிக்கும் நிலையில், அவர்களுக்காக பள்ளி பேருந்துகளை இயக்கி வருகிறது.
இந்நிலையில் இன்று காலை பள்ளி வேன் ஒன்று அதம்பை எனும் கிராமத்திலிருந்து மாணவர்களை ஏற்றிக் கொண்டு வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, அருகிலுள்ள வயலுக்குள் சென்று விபத்துக்குள்ளானது.
இதில், வேனில் இருந்த 8 மாணவர்கள் படுகாயம் அடைந்த நிலையில், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. இதில் இரண்டு குழந்தைகளுக்கு தலையில் அடிபட்ட நிலையில், அவர்களை மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விபத்து நடந்த பிறகு பள்ளி நிர்வாகம் சார்பில் காயமடைந்த குழந்தைகளை பார்க்க மருத்துவமனைக்கு யாரும் வரவில்லை என்று கூறி, மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போராட்டம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் அனைவரையும் சமாதானப்படுத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். இதற்கிடையே, வழக்கமாக வரும் பள்ளி வேன் எப்சிக்கு சென்று விட்ட நிலையில், வேறு ஒரு தனியார் வேனை பயன்படுத்திய நிலையில், அது சரியான கட்டுப்பாட்டில் இல்லாதது தான் விபத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…