ஆவணி மாதத்தில் வரும் மிக முக்கியமான விரத மற்றும் வழிபாட்டு நாட்களில் ஒன்று நாக பஞ்சமி. பொதுவாக, பாம்புகளை தெய்வமாக வழிபடும் வழக்கம் நம்மிடையே இருந்து வருகிறது. வாசுகி, ஆதிசேஷன், காலிங்கன் என பல பெயர்களால் அழைக்கப்படும் நாகங்களை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாளே இந்த நாக பஞ்சமி. அன்றைய தினம் விரதமிருந்து நாகங்களை வழிபடுவதால் செல்வ வளம் அதிகரிக்கும். விருப்பங்கள் நிறைவேறும். மேலும், நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், நாக தோஷத்தால் திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், மண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திப்பவர்கள், பாம்புகளால் பிரச்சனைகளை சந்திப்பவர்கள், பாம்புகள் அடிக்கடி கனவில் வருபவர்களும் ஆகியோர் இந்த நாளில் விரதம் இருந்து வேண்டிக் கொள்ளலாம். இதனால் பாம்புகளால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து நிரந்தர நிவாரணம் கிடைக்கும்.
நாகபஞ்சமி திதி மற்றும் நல்ல நேரம்:
ஆவணி மாதம் வளர்பிறை பிறையில் வரும் பஞ்சமி திதியை நாக பஞ்சமியாக கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு நாக பஞ்சமி ஆகஸ்ட் 21 ம் தேதி வருகிறது. பஞ்சமி திதியானது ஆகஸ்ட் 21 ஆம் தேதி பகல் 12.21 மணிக்கு துவங்கி, ஆகஸ்ட் 22 ஆம் தேதி பகல் 2 மணி வரை உள்ளது.
நாகபஞ்சமி விரதம் 2023 இருப்பது எப்படி?
அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்துவிடுங்கள். பால் ஒரு டம்ளர் மட்டும் குடித்துவிட்டு விரதத்தை தொடங்கவும்.
மாலை 5 மணியளவில் வீட்டின் பூஜையறையில் புற்று அல்லது நாகத்துடன் இருக்கக்கூடிய கடவுள் படங்கள் இருந்தால் சுத்தம் செய்து பூக்களால் அலங்கரித்துக் கொள்ளவும்.
பின்னர், வடை, பாயசம், முக்கியமாக கொழுக்கட்டையோ அல்லது பால் கொழுக்கட்டையோ செய்து பூஜைசெய்து, தேங்காய் உடைத்து வைத்து, பழம், வெற்றிலை, பாக்குடன் நைவேத்யம் செய்ய வேண்டும்.
மஞ்சள் சரடு 10 எடுத்து அவற்றை முடி போட்டு, அவற்றை படத்தின் வலது பக்கம் வைத்துக்கொள்ள வேண்டும். பூஜை செய்யும் போது அம்மனுக்கு ஒரு சரடு மட்டும் சாற்ற வேண்டும்.
பூஜை முடிந்ததும் அந்த சரடை அனைவரும் வலது கையில் கட்டிக் கொள்ளலாம். அருகில் பாம்பு புற்று இருந்தால் சிறிது, பால், பழம், கொழுக்கட்டை எடுத்துக் கொண்டு போய், புற்றில் பால்விட்டு, பழம், கொழுக்கட்டை வைத்து விட்டு வரலாம்.
அருகில் புற்று ஏதும் இல்லையென்றால் வீட்டில் பூஜையில் வைத்திருக்கும் அம்மன் படத்தின் மேலேயே சிறிது பால் அபிஷேகம் செய்துக் கொள்ளலாம். இந்த நோன்பு கூடப் பிறந்த சகோதரர்களின் நலத்தையும் வளத்தையும் கோரும் நோன்பாகும்.
அதனால் அவர்களை வீட்டிற்கு அழைத்து சாப்பாடு போட்டு பணமோ அல்லது துணிகளோ வைத்து, தாம்பூலம் கொடுத்து, பெரியவர்களாக இருந்தால் நமஸ்கரித்து ஆசி பெற வேண்டும். சிறியவர்களாக இருந்தால் ஆசீர்வாதம் செய்ய வேண்டும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…