விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலில் பக்தர்கள் இன்று முதல் நான்கு நாட்களுக்கு தரிசனம் செய்யலாம் என வனத்துறை அறிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது பிரசித்திபெற்ற சதுரகிரி மலை. சித்தர்கள் அதிகம் வாழும் மலையாக கருதப்படும் இங்கு சுந்தரமகாலிங்கம் சுவாமிகள் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி, அமாவாசை நாட்களில் பக்தர்கள் மலையேறி சென்று சுந்தரமகாலிங்க சுவாமியை தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த நிலையில் ஜூலை 1ம் தேதியான இன்று ஆனி மாத சனிபிரதோஷ வழிபாடு, பவுர்ணமி வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரி மலைக்குச் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி இன்று (ஜூலை.1) முதல் 4-ம் தேதி வரை பக்தர்கள் சதுரகிரி மலை ஏறி தரிசனம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 10 வயது உட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு மலையேற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை மலையேறும்போது கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மலைப் பாதைகளில் உள்ள நீரோடையில் பக்தர்கள் குளிக்கக்கூடாது எனவும், இரவில் மலைக் கோவிலில் பக்தர்கள் தங்க அனுமதி இல்லை எனவும் வனத்துறை தெரிவித்துள்ளது.
சதுரகிரி மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ள இந்த 4 நாட்களில், மலைப்பகுதியில் மழை பெய்தாலோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்தாலோ பக்தர்கள் மலை ஏறத் தடை விதிக்கப்படும் என்றும் வனத்துறை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…