விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கே.கே.நகர் காலனி அமீர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (25). இவருடைய மனைவி கார்த்திகா (23). இந்த தம்பதியினருக்கு கடந்த வருடம் அக்டோபர் 30 ஆம் தேதி சாத்தூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு மூச்சு குழாயில் சுவாசிப்பு பிரச்சனை இருந்ததாக மதுரையில் ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து கடந்த வருடம் நவம்பர் 2 ஆம் தேதி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில், ஒரு வருடம் கழித்து குழந்தைக்கு நாக்கில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். நேற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, குழந்தையின் சிறுநீர்குழாயிலும் பிரச்சனை இருப்பதை கண்டறிந்த டாக்டர் நாக்கு மற்றும் சிறுநீர் குழாயையும் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
இந்த நிலையில் மருத்துவர்கள், நாக்கிற்கு பதிலாக பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்துள்ளதாக குழந்தையின் தந்தை அஜீத்குமார் போலீஸில் புகார் செய்துள்ளார். இந்த பிரச்சனை பெரியதானதும், அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல், அறுவை சிகிச்சைத் துறைத்தலைவர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் அறிக்கையின் வாயிலாக விளக்கம் அளித்துள்ளார்.
அதில், "குழந்தை பிறந்த 4 நாள்களில் வாயில் நீர்க்கட்டியுடன் மூச்சுத்திணறல் இருந்ததால், அதை அப்போது ஆபரேசன் செய்து அகற்றினோம். ஓராண்டு கடந்து மீண்டும் ஒரு ஆபரேசன் செய்ய வேண்டுமென்பதால் செய்தோம். அப்போது குழந்தைக்கு சிறுநீரக பிரச்னை இருப்பது தெரிந்தது. பின்னாளில் இது குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அதே ஆபரேசனோடு பிறப்புறுப்பில் சிறிய அளவிலான ஆபரேசன் செய்யப்பட்டது.
ஆபரேசன் தியேட்டாரில் இருந்ததால் இதை உடனே பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை. குழந்தையின் நலனுக்காக நல்லது செய்தோம். அதை தவறாக புரிந்துகொண்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…