கோவை: வடகோவை ரயில்வே தண்டவாளம் அருகே கிடந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீசார் மீட்டனர்.
கோவை ரயில் நிலையத்தில் இருந்து வடகோவை செல்லும் ரயில்வே தண்டவாளம் அருகே போடப்பட்டிருந்த ராட்ச குழாய் உள்ளே நிர்வாண நிலையில் இறந்த ஆண் சடலம் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் ரயில்வே தண்டவாளம் அருகே மாநகர காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் சடலம் கண்டறியப்பட்டதால் அவர்கள் ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் ஆய்வு மேற்கொண்ட போது, குழாயின் உள்ளே நிர்வாண நிலையில் சடலம் இருந்தது தெரியவந்தது.
மேலும் அவரது உடைகள் குழாய் அருகேயும், ரயில்வே மின் கம்பத்திலும் மீட்கப்பட்டது. இதையடுத்து அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த நபர் கோவை அரசு மருத்துவமனையிலிருந்து சிகிச்சை பெற்று வந்த தடயங்கள் இருந்ததாகவும், கடந்த சில நாட்களாகவே அந்த நபர் இரவு நேரங்களில் அங்கு அவர் தங்கியிருந்தது தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் இறந்தவர் யார்? எதற்காக வந்தார்? இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…