சென்னை: எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு போடுவோம் என்ற மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம். முடிந்தால் வழக்கு போடுங்கள் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு, அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை சவால் விடுத்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அ.இ.அ.தி.க. தேர்தல் பிரிவு துணைச் செயலாளரும், வழக்கறிஞருமான இன்பதுரை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், செந்தில் பாலாஜி கைது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்ட வீடியோவில் எங்களை சீண்டி பார்க்க வேண்டாம் எனவும் எடப்பாடி பழனிசாமி குறித்தும் பேசியுள்ளார். எங்களை அடித்தால் திருப்பி அடிப்போம் என்ற தொனியில் முதலமைச்சர் பேசி இருக்க கூடாது. ஒரு முதலமைச்சர் எப்படி பேச வேண்டும் என வரைமுறை இருக்கிறது என கூறினார்.
அவரை தொடர்ந்து ஆர் எஸ் பாரதியும் பேட்டி கொடுத்துள்ளார். அவர் ஏதோ இருதவியல் நிபுணர் போல பேசி உள்ளார். செந்தில்பாலாஜியை கைது செய்தது சரியா தப்பா? இது தான் கேள்வி. செந்தில்பாலாஜி குற்றவாளியே இல்லை என சொல்கிறார்கள். அவர் குற்றவாளி என நீதிமன்றம் சொல்கிறது. நெஞ்சு வலி என துடித்தவர் முதலமைச்சர் வந்ததும் எழுந்து நின்று வணக்கம் தெரிவிக்கிறார். இது தான் விமர்சனத்துக்குள்ளாகிறது என கூறினார். எடப்பாடி பழனிசாமியை அடிமை என செல்கிறார் ஆர் எஸ் பாரதி. ஒரு குடும்பத்துக்காக வேலை செய்யும் ஆர்.எஸ் பாரதி அடிமையா அல்லது எடப்பாடி பழனிசாமி அடிமையா? என கேள்வி எழுப்பினார்.
எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு போடுவோம் என சொல்கிறார்கள். வேலுமணி, தங்கமணி மீது வழக்கு உள்ளது என கூறுகிறார்கள். வழக்குகளை வைத்து மிரட்டும் தொனியில் பேசுவதை நிறுத்த வேண்டும். முடிந்தால் வழக்கு போடுங்கள். முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி தங்கமணி வீடுகளில் ரெய்டு நடந்த போது பதவியை காப்பாற்றிக்கொள்ள டெல்லி ஓடினார் என ஆர்.எஸ்.பாரதி சொன்னதை நிரூபித்தால் , தான் அரசியல் பேசுவதையே நிறுத்திவிடுவதாகவும், அல்லது ஆர்.எஸ்.பாரதி நிறுத்தி விட வேண்டும் என கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…