செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட்ட ஆளுநரின் நடவடிக்கையைக் கண்டித்து, சென்னையில் 'கிண்டிக்கு ஒரு கேள்வி..?' என்ற தலைப்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தார். தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த ஆளுநரின் நடவடிக்கைக்கு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், மூத்த நிர்வாகிகள் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தனர். இதையடுத்து, ஒரு சில மணி நேரத்தில் செந்தில்பாலாஜியின் அமைச்சர் பதவி நீக்க உத்தரவை நிறுத்திவைக்கப்பதாக ஆளுநர் மாளிகை கூறியுள்ளது.
இந்நிலையில், செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கிய ஆளுநரைக் கண்டிக்கும் வகையில், சென்னையில் அண்ணாசாலை, தேனாம்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் இரவோடு இரவாக கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஹேமந்த் அண்ணாதுரை என்ற பெயரில் 'கிண்டிக்கு ஒரு கேள்வி..?'என்ற தலைப்பில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில், கொலை, கொள்ளை, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்த பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 34 அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அவர்களை பதவியிலிருந்து நீக்கக் கோரி டெல்லிக்கு கடிதம் எழுதுவீர்களா கிண்டி..? என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. மேலும், மத்திய அமைச்சர்கள் ஒருசிலரின் புகைப்படங்கள், அவர்கள் வகிக்கும் பதவிகள், அவர்கள் மீதுள்ள குற்ற வழக்குகளின் எண்ணிக்கையும் அந்தப் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…