தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கக் கூடாது என விதிகள் வகுக்கப்பட்டு உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் செம்பியம் ஜி.தேவராஜன் என்பவர் 2017ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சென்னை பெரம்பூர் டான் பாஸ்கோ பள்ளியில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பதால், பள்ளி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பள்ளி கல்வித்துறை தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், மனுதாரர் கூறும் புகார் ஏற்புடையதல்ல என்றும், தனிக் குழு அமைத்து விசாரணை நடத்தியதில் டான் பாஸ்கோ பள்ளியில் உரிய கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுவது தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தனியார் மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கக் கூடாது என்று 2018ஆம் ஆண்டு விதிகள் வகுக்கப்பட்டு உள்ளதாகவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மனுதாரர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
டான் பாஸ்கோ பள்ளி தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், மனுதாரர் தேவராஜனின் குற்றச்சாட்டுகள் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், பள்ளிக்கும், மாணவர்களுக்கும் எவ்வித சம்பந்தமில்லாமல் மனுதாரர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளதால், வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அவகாசம் கேட்டதையடுத்து, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 21 ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…