கோவையில் நேற்று நள்ளிரவில் பாஜகவினர் திடீரென திமுகவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் மாநகரில் அவிநாசி சாலையில் 10.3 கிலோமீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் கட்டுமானப்பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக தற்போது வரை 300க்கும் மேற்பட்ட தூண்கள் கட்டப்பட்டுள்ளன.
இந்த தூண்களில் அனைத்து கட்சியினரும் தங்கள் கட்சி போஸ்டர்களை ஓட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன், சமீபத்தில் ஒரு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, பொது இடங்கள் மற்றும் தூண்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை 10 நாட்களுக்கும் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால் ஆளும் கட்சியான திமுக போஸ்டர்கள் 10 நாட்களுக்கு மேலாகியும் அகற்றப்படாததால், அதை கண்டித்து கோவை மாவட்ட பாஜவினர் 300க்கும் மேற்பட்டோர், நேற்று இரவு அவிநாசி சாலையில் உள்ள ஜென்னி கிளப் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து விரைந்து வந்த போலீசார் பாஜகவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாலத்தின் துாணில் ஒட்டப்பட்டிருந்த திமுக போஸ்டர்களை கிழித்தெறிந்து, பாஜகவினர் கோஷம் எழுப்பினர். இதனால் போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து போஸ்டர்களை கிழித்த 40க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். எனினும் அங்கிருந்து கலையாத பாஜகவினர் பலர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் இவர்களிடம் நள்ளிரவு கடந்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே ஹோப் காலேஜ் பகுதியில் கிழிக்கப்பட்ட போஸ்டர்களை மீண்டும் ஒட்டும் பணியில் திமுகவினர் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…