சுங்குவார்சத்திரம் பகுதியில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து 53 லட்சம் மதிப்பிலான செல்போன்களை மூட்டைக்கட்டி ஆட்டோவில் எடுத்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த மொளச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம். இவர் சுங்குவார்சத்திரம் பஜாரில் செல்போன் கடை வைத்துள்ளார். நேற்று இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டி கொண்டு சென்றுள்ளார். இதையடுத்து இன்று காலை கடையை திறக்க வந்த போது கடையின் முன்பக்க ஷட்டர் உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது, கடையில் இருந்த ஆப்பிள், ரெட்மி, ரியல்மீ, சாம்சங், விவோ போன்ற 53 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. பின்னர் இது குறித்து உடனடியாக அப்துல் ரஹீம் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், ஆட்டோவில் வந்த மூன்று மர்ம நபர்கள் இரும்பு ஆயுதத்தை கொண்டு ஷட்டரை உடைப்பதும், பின்னர் இருவர் முகத்தை மறைத்துக் கொண்டு உள்ளே சென்று கடையில் உள்ள செல்போன்களை கோணி பையில் மூட்டை கட்டி ஆட்டோவில் எடுத்துச் செல்வதும் பதிவாகி இருந்தது. இது குறித்து அப்துல் ரஹீம் அளித்த புகாரின் பேரில் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…