காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் கோயில் தெருவில் வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நவீன சைக்கிளை லுங்கி அணிந்த கொள்ளையன் எந்த பதட்டமும் இல்லாமல் எடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி தெருவை சேர்ந்தவர் ராஜ்கபூர். இவரது மகன் பிரவீன்ராஜ் 12ம் வகுப்பு படித்துவருகிறார். இந்த நிலையில், பிரவீன்ராஜ் பள்ளிக்கு சென்றுவருவதற்காக அவரது தந்தை ரூ.11 ஆயிரம் மதிப்புள்ள கியர் சைக்கிள் ஒன்றை வாங்கிக் கொடுத்தார்.
கடந்த 7ஆம் தேதியன்று இரவு, கியர் சைக்கிளை பிரவீன்ராஜ் தனது வீட்டின் எதிரே நிறுத்தி பூட்டிவிட்டு சென்றார். பின்னர், மறுநாள் காலை வந்து பார்த்தபோது நிறுத்தப்பட்ட இடத்தில் சைக்கிள் இல்லாததது கண்டு மாணவன் பிரவீன்ராஜ் அதிர்ச்சியடைந்தார்.
இதனையெடுத்து அருகிலுள்ள வீட்டின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது, லுங்கி அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர், நோட்டமிட்டு சிசிடிவி கேமரா இருப்பதை பார்த்தும் எவ்வித அச்சமுமின்றி சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. சம்பவம் குறித்து சிவகாஞ்சி காவல்நிலையத்தில் பிரவீன்ராஜன் தந்தை ராஜ்கபூர் புகார் அளித்துள்ளார்.
கடந்த 7-ஆம் தேதி மாலை சாத்தான்குட்டை தெருவில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளை, லுங்கி அணிந்துவந்த மர்ம நபர் ஒருவர், சைக்கிளின் உரிமையாளரை போல உரிமையோடு பட்டபகலில் எடுத்து சென்றுள்ளார். இந்த 2 சைக்கிள் திருட்டு தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி காஞ்சிபுரம் மக்களிடையே அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இரு சக்கர வாகனங்கள் திருடினால் நம்பர் பிளேட்களை வைத்து போலீசார் கண்டுபிடித்துவிடுவதால், தற்போது சைக்கிள் திருட்டில் கொள்ளையர்கள் இறங்கிவிட்டதாகக் கூறும் அப்பகுதி மக்கள், இதுபோன்ற திருட்டு தொடராமல் தடுக்க காஞ்சிபுரம் போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…