காஞ்சிபுரத்தில் முதல்நாள் சமைத்து மீதியான உணவை மீண்டும் பதப்படுத்தி மறுநாள் விற்பனை செய்த உணவகத்திற்கு இரண்டாயிரம் அபராதம் விதித்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள், கடையை ஒருநாள் அடைத்து தூய்மைப்படுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
காஞ்சிபுரம் மாநகரில் கடந்த சில மாதங்களாகவே எண்ணற்ற சாலை ஓரக்கடைகள் மற்றும் உணவகங்களில் உணவுகள் தரமற்ற முறையில் தயாரித்து உணவு பிரியர்களுக்கு விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு அலுவலருக்கு புகார் வந்துள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் அ.தி.மு.க. மாமன்ற உறுப்பினர் சிந்தன், காவலன் கேட் பகுதியில் உள்ள முனியாண்டி விலாஸ் உணவகத்தில் நேற்று சமைத்த உணவை மீண்டும் பதப்படுத்தி விற்பனை செய்வதாக வாட்ஸ்அப் மூலம் உணவு பாதுகாப்பு அலுவலருக்கு புகார் தெரிவித்தார்.
இதனையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இணைந்து அந்த உணவகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது நேற்று சமைத்த உணவை மீண்டும் பதப்படுத்தி விற்பனை செய்ய வைத்திருந்ததும் உணவகத்தை அசுத்தமாக வைத்திருந்ததாகவும் அரசு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதாகவும் கூறி அதற்கு மாநகராட்சி சார்பில் ரூபாய் 2000 அபராதம் விதித்தனர்.
மேலும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இன்று ஒரு நாள் உணவு விற்பனைக்கு தடை செய்து, உணவகத்தை தூய்மைப்படுத்திய பின்பு மீண்டும் விற்பனைக்கு ஆய்வுக்குப் பின் அனுமதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டு அதற்கான பணிகளை துவங்க உணவக உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே செயல்பட்டு வந்த இந்த உணவகம் தரமற்ற முறையில் இருந்தது ஆய்வில் தெரிய வந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் சாலையோர உணவகங்களையும் அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…