விமானத்தில் பயணம் செய்து கோவையில் கொள்ளையில் ஈடுபடும் ஒரு வடநாட்டு கும்பலை கோவை ஆர்.எஸ்.புரம் போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர். இதில் கொடுமை என்னவென்றால் இந்த கும்பலில் 3 பேர் சிறுவர்கள் ஆவர்.
நடந்தது என்ன?
சமீப காலங்களாக கோவை ஆர்.எஸ்.புரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டு நடந்து வருவதாக போலீசுக்கு புகார் மேல் புகாராக பறந்தது. இதனால் ஆர்.எஸ்.புரம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், ஆர்.எஸ்.புரம் பூ மார்க்கெட் பஸ் ஸ்டாப் அருகில் ஒரு முதியவரை சூழ்ந்துகொண்டு நின்ற 7 பேர் கொண்ட கும்பல் நூதன முறையில் முதியவருக்கே தெரியாமல் அவரது பணம் மற்றும் செல்போனை திருடியுள்ளனர். இதை பார்த்த போலீசார் உஷாராகி 7 பேர் கொண்ட கும்பலை சுற்றிவளைத்து கையும் களவுமாக மடக்கி பிடித்தனர்.
பின்னர் காவல்நிலையம் கொண்டு செல்லப்பட்டு உரிய முறையில் விசாரிக்கப்பட்டுள்ளது. அப்போது அவர்கள் கூறிய விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.
ஜார்கண்ட்டை சேர்ந்த பகதூர் மகடோ (36), சந்தோஷ் (33), பப்லு மகடோ (23) பீகாரை சேர்ந்த மனிஷ்மகோலி (22) மற்றும் பீகாரை சேர்ந்த 15 வயது சிறுவன், ஜார்கண்ட்டை சேர்ந்த 14 மற்றும் 10 வயது சிறுவன் என 7 பேர் சேர்ந்து கூட்டாக இதில் ஈடுபட்டுள்ளனர்.
விசாரணையில் வெளிவந்த உண்மை
விசாரணையின்போது அவர்கள் கூறுகையில், "நாங்கள் 7 பேரும் பீகார் மற்றும் ஜார்கண்ட்டை சேர்ந்தவர்கள். அவ்வப்போது கோவை வந்து காந்திபுரத்தில் ரூம் எடுத்து தங்குவோம். பிறகு 7 பேரும் ஒன்றாக கும்பலாக செல்வோம்.
கடைகளுக்கு செல்லும்போது பொருட்கள் வாங்குவது போல் நடித்து கடைகளில் எது கிடைத்தாலும் திருடிக்கொண்டு வந்துவிடுவோம். குறிப்பாக விஷேச நாட்களில் எங்கு கூட்டம் அதிகம் கூடும் என நோட்டமிட்டு அங்கு சென்று திருடுவோம்.
இது மட்டுமல்லாது வாரத்தில் ஒன்றிரண்டு நாட்கள் திருப்பூர்,பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் என மற்ற பகுதிகளுக்கும் சென்று திருடிக்கொண்டு வருவோம். கோவையில் காலை நேரத்தில் மக்கள் அதிகம் கூடும் உழவர் சந்தை, பூமார்க்கெட் போன்ற இடங்களுக்கு அதிகாலையிலேயே சென்று பணம் மற்றும் செல்போனை திருடுவோம்.
அதன் பின்னர் ரயில் நிலையம், காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் என மக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களுக்கு செல்வோம். எங்கள் கும்பலில் உள்ள 3 சிறுவர்கள் தான் பெரும்பாலும் திருடுவார்கள். சிக்கிக் கொண்டாலும் சிறுவர்கள் என்பதால் பல சமயங்களில் எச்சரித்து அனுப்பி விடுவார்கள்.
பின்னர் திருட்டை முடித்துக் கொண்டு சொந்த ஊருக்கு செல்லும் போது ஒருவர் மட்டும் விமானத்தில் செல்வோம். மற்றவர்கள் அனைவரும் ரயிலில் வருவார்கள். சுழற்சி முறையில் ஒவ்வொரு முறையும் ஒருவர் மாற்றி ஒருவர் விமானத்தில் செல்வோம்.
கொள்ளையடித்ததை வைத்து சொந்த ஊரில் ஆடம்பரமாக வாழ்வோம். பணம் தீர்ந்துவிட்டால் பின்னர் மீண்டும் கோவை வந்து கொள்ளை அடிப்போம்." எனத் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் சிறுவர்களை தவிர்த்து 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுவர்கள் 3 பேரையும் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…