சிவகங்கை மாவட்டத்தில் பாம்பு கடித்த 10 வயது சிறுமிக்கு சிகிச்சை அளிப்பதில் செவிலியர்கள் தாமதம் காட்டியதால், சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சேர்வாஊரணி என்ற பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான செல்வம் மற்றும் அமுதா தம்பதியின் 10 வயது மகள் ஓவியா இரவு வீட்டில் தரையில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது பாம்பு ஒன்று சிறுமி யை கடித்துள்ளது.
இதனால் வலியால் துடித்த சிறுமி தனது தாயை எழுப்பி ஏதோ கடித்து விட்டது என்று அலற, சிறுமியின் தாய் எழுந்து பார்த்த பொழுது, பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன், உடனடியாக மகளை காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு இரவுப்பணியில் இருந்த மருத்துவர் நல்ல தூக்கத்தில் இருந்த நிலையில், நர்ஸை எழுப்பி விபரத்தை கூறிய நிலையில், சிறுமியின் தாயிடம் கடித்தது என்ன பாம்பு என்று நர்ஸ் கேட்டதாக தெரிகிறது. ஆனால் இருட்டில் சரியாக தெரியவில்லை என்று தாய் அமுதா கூறிய நிலையில், பாம்பு வீட்டில் தான் எங்காவது கிடக்கும் தேடிப்பாருங்கள் என்று சொல்லிக்கொண்டு, காயத்தை வைத்து பார்க்கும் போது அது தண்ணீர் பாம்பாக இருக்கலாம் என்று கூறி ரத்தத்தை எடுத்து ஆய்வுக்கு வைத்துள்ளார்.
மேலும், பாம்பு கடிக்கு விஷத்தை முறிக்கும் விஷமுறிவு மருந்து கொடுக்காமல் வெறும் டிரிப்ஸ் மட்டும் ஏற்றி, ஊசி போட்ட நிலையில், சிறுமி மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்து விட்டார். மருத்துவர் வந்து சிகிச்சை அளித்திருந்தால் குழந்தையை காப்பாற்றியிருக்கலாம் என்றும், நர்ஸ்களின் அலட்சியத்தால் தான் சிறுமி உயிரிழந்தார் என சிறுமியின் பெற்றோர் வேதனை தெரிவித்தனர்.
அரசு மருத்துவமனை நர்ஸ்களின் அலட்சியத்தால் சிறுமி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…