பாளையங்கோட்டை சீவலப்பேரி அருகே பாலாமடையைச் சேர்ந்தவர் பேச்சி. இவர் சென்னையில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஆறுமுகக்கனி (வயது 42) . இந்த தம்பதிக்கு 19 வயதான அருணா என்ற மகள் இருந்தார். இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நர்சிங் காலேஜில் டிப்ளமோ நர்சி படித்து வந்தார். இந்தநிலையில், அருணா தனது கல்லூரியில் படிக்கும் இளைஞரை காதலித்து வந்துள்ளார். ஆனால், அந்த இளைஞர் வேறு சாதியை சேர்ந்தவர் என்று தெரிந்து, பெற்றோ எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால், அருணா அவரை தான் கல்யாணம் செய்துக்கொள்வேன் என்று பிடிவாதமாக இருந்துள்ளார். இதனால், ஆறுமுகக்கனி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அருணா படிக்கும் கல்லூரிக்கு சென்று, தனது மகளின் படிப்பை பாதியில் நிறுத்தி அவரை ஊருக்கு அழைத்து வந்துள்ளார். இந்தநிலையில், அருணாவின் பெற்றோர் வேறிடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கப் போவதாக தெரிவித்துள்ளார். இதற்காக மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்க நேற்று வருவதாக இருந்தது.
ஆனால், இதற்கு அருணா ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தாய்க்கும், மகளுக்கும் இது சம்பந்தமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த ஆறுமுகக்கனி அருணாவை அவரது தோளில் கிடந்த துப்பட்டாவால் கழுத்தை சுற்றி நெரித்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
மகளை கொன்ற பயத்தில் ஆறுமுகக்கனி வீட்டில் இருந்த கத்தியால் கையில் வெட்டியும், விஷம் குடித்தும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். சம்பவம் அறிந்து சம்பவ இடடத்திற்கு வந்த போலீஸார், பிணமாக கிடந்த அருணாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், ஆறுமுகக்கனியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து மேல்விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலை கைவிட மறுத்த மகளை அவரது தாயே கழுத்தை இறுக்கி கொலை செய்த பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…