ஆத்தூர் அருகே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நின்று செல்லாததைக் கண்டித்து, நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சேலம், சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காட்டுக்கோட்டை என்னும் ஊர் உள்ளது. இப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிற்காமல் சேலம், சென்னை புறவழிச்சாலையாக செல்வதால் 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்களும், மாணவ மாணவிகளும், பாதிக்கப்படுவதாக கூறி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் சாலை ஓரத்தில் பந்தல் அமைத்து திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆத்தூர் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் சதீஷ்குமார் மற்றும் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் ஆத்தூர் ஊரக காவல் துறையினர் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, அரசு பேருந்து நிற்காமல் செல்வது குறித்து சம்பந்தப்பட்ட ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தில் இது குறித்து தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து, உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது.
இது குறித்துப் பேசிய அப்பகுதி மக்கள், காட்டுக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற வடசென்னிமலை பாலசுப்பிரமணியர் சுவாமி திருக்கோவில், ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கல்வி பயிலும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மட்டுமல்லாது 20க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் காட்டுக்கோட்டை பகுதியில் நிற்காமல் செல்வதால், தாங்கள் மிகுந்த சிரமப்படுவதாகவும், இதனால் கல்வி பயிலும் மாணவ மாணவிகள் நாள்தோறும் அவதிக்குள்ளாகி வருவதாகவும் வேதனை தெரிவித்தனர். தங்களது கோரிக்கை குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, நீண்டகாலப் பிரச்சனைக்குத் தீர்வு காணவேண்டும். இவ்வாறு அவர்கள் வலியுறுத்தினர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…