திருப்பூரில் குடும்பத்தகறாரால் மனைவியின் தலையை துண்டித்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு டி.எம்.எஸ் நகரில் உள்ள தனியார் குடியிருப்பில் மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 37) என்பவர், 2வது மனைவி பவித்ரா(வயது31) மற்றும் ஒன்றரை வயது மகனுடன் வசித்துவந்தார். மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் அருகில் உள்ள கோவிலில் பூ விற்பனை செய்து பூசாரியாக பணியாற்றிவருகிறார்.
மணிகண்டனுக்கும் மனைவி பவித்ராவுக்கும் இடையே அவ்வப்போது சண்டை நடந்துவந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இருவரிடையே ஏற்பட்ட சண்டையின்போது ஆத்திரமடைந்த மணிகண்டன், மனைவி பவித்ராவின் தலையை துண்டித்து பல இடங்களில் வெட்டி கொடூரமாகக் கொலை செய்தார்.
தகவலறிந்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு புகார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பூர் வடக்கு போலீசார், பவித்ராவின் உடல் மற்றும தலையை கைப்பற்றி உடற்கூறு ஆய்வு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக மணிகண்டனை கைது செய்த போலீசார் நடத்திய விசாரணையில், பவித்ராவை கடந்த மூன்று ஆண்டுகளுக்குமுன் இரண்டாவதாக திருமணம் செய்து, தற்போது டி எம் எஸ் நகர் பகுதியில் வசித்து வருவதாகவும் அவர்களுக்கு ஒன்றரை வயதில் மகன் உள்ள நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்ததும் தெரியவந்தது. நேற்று நடந்த சண்டையில் மணிகண்டன் பவித்ராவின் தாயார் குறித்து பேசியதால் ஆத்திரம் அடைந்த பவித்திரா மணிகண்டனை அடித்ததாகவும், அதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் பவித்ராவை 30க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டிக்கொலை செய்ததும் உறுதியானது.
கொலை செய்தபின், பவித்ராவின் தலையை வெட்டி தனியாக கூடையில் வைத்து எடுத்துச் செல்ல முயற்சித்த நிலையில், அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மணிகண்டனை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. குடும்பத்தகராறில் மனைவியை கணவனே கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் திருப்பூரில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…