கோவையில் இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டுயானையை பார்த்து பொதுமக்கள் பீதியடைந்தனர். வனத்துறையினர் வந்து அடர்ந்த காட்டுக்குள் அந்த யானையை விரட்டிய பிறகு அவர்கள் நிம்மதியடைந்தனர்.
மருதமலை வனப்பகுதியிலிருந்து நேற்று மாலை வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை ஒன்று பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் உலா வந்தது. இதனையடுத்து அதனைக் கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். அந்த தகவலைத் தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சி மேற்கொண்டனர். எனினும் யானை அதே பகுதியில் சுற்றி வலம் வந்தது.
இரவு கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட கல்வீரம்பாளையம் பகுதியில் ஊருக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. யானை ஊருக்குள் வந்ததை அடுத்து வனத்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையை அடர் வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது ஊருக்குள் மக்கள் அதிகம் குடியிருக்கும் பகுதியில் யானை உலா வந்ததால், பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
பின்னர், பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் ஒலிபெருக்கி வாயிலாக எச்சரிக்கை விடுத்தனர். அதன் பின்னர் யானையை அடர் வனப்பகுதியான மேற்குத் தொடர்ச்சி அடிவாரத்திற்கு விரட்டியடித்தனர். தற்போது ஒற்றைக் காட்டு யானை ஊருக்குள் புகுந்ததால் அப்பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது. அந்த காட்சிகளை அப்பகுதியில் உள்ள மக்கள் வீடியோவாக பதிவிட்டு இணையத்தில் வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…