தூத்துக்குடி அருகே மாப்பிள்ளையூரனி கிராமத்தில் கல்விக் கடனை முறையாக திருப்பிச் செலுத்தாதால், வாடிக்கையாளரின் நகையை திருப்பி தர மறுத்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் மற்றும் ஊழியரும் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி புதிய முனியசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ். இவர், தனது மகன் இசக்கி செல்வம் பெயரில் மாப்பிள்ளையூரனி கிராமத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில், கடந்த 2016 ஆம் ஆண்டு கல்வி கடன் வாங்கியுள்ளார். ஆனால், இந்த கல்வி கடனை முறையாக அவர் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும், பொன்ராஜ் இதே வங்கியில் நகைகளை வைத்து நகைக்கடனும் பெற்றுள்ளார். இந்நிலையில், கல்வி கடனை கட்டாத காரணத்தினால், நகைக்கடன் பெற வைக்கப்பட்ட நகையைத் திருப்பித் தர மாட்டோம் என வங்கி மேலாளர் திவாகர் பொன்ராஜிடம் கூறியுள்ளார்.
இந்நிலையில், இன்று காலை பொன்ராஜ், மகன் இசக்கி செல்வதுடன் வங்கிக்கு வந்து வங்கி மேலாளர் திவாகருடன் இந்த விவகாரம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் இசக்கி செல்வம், வங்கி மேலாளர் திவாகர் மற்றும் வங்கி ஊழியர் ஈஸ்வரன் ஆகியோரை வங்கியின் உள்ளே வைத்து தாக்கியுள்ளார். அலுவலகத்தில் இருந்த பொருட்களையும் அவர் கீழே தள்ளி சேதப்படுத்தி உள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த வங்கி மேலாளர் திவாகர் மற்றும் வங்கி ஊழியர் ஈஸ்வரன் ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள தாளமுத்து நகர் காவல்துறையினர், தாக்குதலில் ஈடுபட்ட இசக்கி செல்வம் மற்றும் அவரது தந்தை பொன்ராஜ் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…