சென்னை: புழல் சிறையில் கேரம்போர்டு விளையாடும் போது கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் இரண்டு கைதிகளுக்கு இரும்பு கம்பியால் அடி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புழல் சிறையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு தாழம்பூர் போலீசாரால் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட சிரில்ராஜ், வேளச்சேரி போலீசாரால் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட சதிஷ் ஆகிய இருவரும் கடந்த ஏப்ரல் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை போல் பல்வேறு வழக்குகளில் விசாரணை கைதிகளாக எண்ணூரைச் சேர்ந்த பாம்பு நாகராஜ், தண்டையார் பேட்டை ஜான்சன், சோத்து வினோத், வியாசர்பாடி தினேஷ் ஆகியோரும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் 7பேரும் சிறை வளாகத்தில் அமர்ந்து கேரம்போர்டு விளையாடியுள்ளனர். அப்போது சதிஷ் அதிக பாயிண்ட்களை எடுத்தது தொடர்பாக சிரில்ராஜ் மற்றும் பாம்பு நாகராஜ் தலைமையிலான கோஷ்டியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பானது.
இதில் பாம்பு நாகராஜ் கோஷ்டியினர் சிரில்ராஜ், சதிஷ் ஆகியோரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதில் இருவரும் படுகாயமடைந்தனர். சத்தம் கேட்டு ஓடி வந்த போலீசார் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 5பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…